Share via:
இடைத்தேர்தல் என்றாலே வழக்கமான தேர்தலைவிட கொஞ்சம் அதிகமாகவே ஓட்டுப்பதிவு
நடைபெறும். ஆனால், யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு 82 சதவிகிதத்தைத் தொட்டுள்ளது விக்கிரவாண்டி.
இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் பா.ம.க. 25 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
பெறும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.
மேலும் அவர், ‘’தி.மு.க.வினர் கள்ள ஓட்டு போட்டிருக்கிறார்கள்.
வன்முறையில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதையெல்லாம் தாண்டி பா.ம.க. 25 ஆயிரம் வாக்குகள்
வித்தியாசத்தில் வெற்றி பெறும்’’ என்று கூறியிருக்கிறார். இது சாத்தியமா என்று பார்க்கலாம்.
இந்த தேர்தலில் தி.மு.க. எக்கச்சக்க பணம் கொடுத்ததாக நாம் தமிழர்
சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. அதாவது ஒரு வாக்குக்கு 2000 ரூபாய் கொடுத்ததாகச் சொல்கிறார்கள்.
இதையே சாட்டை துரைமுருகன், ‘திமுக சார்பாக 200 கோடிக்கு மேல் ஒரு இடைத்தேர்தலுக்கு
செலவு செய்யப்பட்டிருக்கிறது திமுக சார்பாக வாக்கிற்கு 2000 ரூபாய் முதல் 4000 வரையும்
கொடுக்கப்பட்டுள்ளது ! பாமகவும் தன் பங்கிற்கு 60000 வாக்குகளை குறி வைத்து 500 வீதம்
பட்டுவாடா செய்துள்ளது’’ என்று கூறியிருக்கிறார்.
இத்தனை பணம் கொடுத்தார்களோ இல்லையோ அத்தனை வீட்டுக்கும் பணம் போய்
சேர்ந்திருக்கிறது. அதனாலே இத்தனை சதவிகித வாக்குப்பதிவு சாத்தியானது என்கிறார்கள்.
இது தான் உண்மை என்றால் தி.மு.க.வுக்கு எதிர்பார்த்தததை விட அதிக வாக்குகள் விழுவதற்கு
வாய்ப்பு உண்டு. அப்படியென்றால், பா.ம.க.வுக்கும் நாம் தமிழருக்கும் டெபாசிட் கிடைப்பதற்கே
வாய்ப்பு இல்லை.
அதேநேரம், அ.தி.மு.க.வினர் யாரும் வாக்களிக்கக்கூடாது என்று எச்சரிக்கை
செய்த எடப்பாடி பழனிசாமிக்கு இது மிகப்பெரும் தோல்வி என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
கடந்த மக்களவைத் தேர்தலில் இந்த தொகுதியில் பதிவான வாக்குகளை விட அதிகம் தற்போது பதிவாகியிருக்கிறது.
ஆகவே, இரட்டை இலை, எடப்பாடி பழனிசாமியின் வேண்டுகோள் போன்றவற்றை கட்சியினரும் மக்களும்
பொருட்படுத்தவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
பாட்டாளி மக்கள் கட்சியினர் குறிப்பிட்ட ஆட்களுக்கு மட்டும் அதாவது
வன்னியர்களுக்கு மட்டும் பிரித்து வைத்து பணம் கொடுத்த ஒரு காரணமே அவர்கள் தோல்விக்கு
முக்கிய காரணம் என்றும் சொல்லப்படுகிறது. 25 ஆயிரம் வாக்குகள் நிச்சயம் வாங்கிவிடுவார்,
அதையே ராமதாஸ் சொல்கிறார் என்று தி.மு.க.வினர் கிண்டல் செய்கிறார்கள்.
13ம் தேதி விடை தெரிந்துவிடும்.