Share via:
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில் பி.பள்ளிப்பட்டு
பகுதியில் தேவாலய சிலைக்கு அண்ணாமலை மாலை அணிவிக்க முன்வந்த விவகாரம் தமிழகத்தில் பெரும்
சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மாதாவுக்கு அண்ணாமலை மாலை போடுவதை தடுத்த கிருஸ்துவ இளைஞர்களுக்கும்
சர்ச் வாசலிலே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அண்ணாமலையை உள்ளே செல்லக்கூடாது என்று
எகிறிய இளைஞர்களிடம், ‘அடுத்து நான் பத்தாயிரம் பேரோடு வந்து மாலை போட்டால் என்ன செய்வீர்கள்’
என்று கேட்டு மிரட்டியதும் போலீஸ் வந்து சம்பந்தப்பட்ட இளைஞர்களை அப்புறப்படுத்தியுள்ளது.
இதையடுத்து ஆதரவாளர்களுடன் கிறிஸ்தவ ஆலயத்தில் நுழைந்த அண்ணாமலை
மேரி சிலைக்கு மாலை அணிவித்துள்ளார். இந்த விவகாரம் தர்மபுரி மட்டுமின்றி ஒட்டுமொத்த
தமிழகத்திலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதேபோன்று வேறு மதத்தைச் சேர்ந்வர்கள் வந்து இந்து கோயிலில் மாலை
போட முடியுமா அல்லது அண்ணாமலையால் இதை ஒரு இஸ்லாம் மசூதிக்குள் போய் செய்யமுடியுமா
என்று கேள்வி கேட்டுள்ளார்கள்.
அதேநேரம் அண்ணாமலை ஆதரவாளர்கள், ‘இதுதான் அண்ணாமலையின் கெத்து.
அடுத்து மசூதிக்குள் நுழைவார்… யார் தடுக்கிறார்கள் என்று பார்க்கலாம்’ என்று வலைதளங்களில்
பரப்பி வருகிறார்கள்.
தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழும் நிலையில், மதக் கலவரம் உருவாக்கும்
வகையில் அண்ணாமலை சர்ச் வாசலில் செய்திருக்கும் சம்பவம் அடுத்து என்னென்ன பிரச்னைகளை
கொண்டுவரப் போகிறதோ என்று அரசியல் பார்வையாளர்கள் அலறுகிறார்கள்.