Share via:
தேர்தலுக்கு முன்பு கிறிஸ்தவர்கள் வாக்கு வங்கியைக் கவர்வதற்கு
சர்ச்சில் மண்டி போட்டு நடந்து பரபரப்பைக் கிளப்பிய விஜய், இன்று திருச்செந்தூரில்
சிறப்பு பரிகாரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அவருக்கு எதிராக குழந்தைகளுக்கு
எதிரான புகார் ஒன்று கிளம்பியிருக்கிறது.
வீட்டுக்கு வீடு விஜய். உங்க அப்பா, அம்மாவிடம் விசிலுக்கு ஓட்டுப்
போடச் சொல்லுங்க என்று உத்தரவு போட்டார் விஜய். இந்த விஷயத்தில் தேர்தல் பிரச்சாரத்தில்
விஜய் குழந்தைகளைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டி, தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள்
கண்காணிப்பகம் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் புகாரளித்துள்ளது.
சட்டமன்றத் தேர்தல் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தின் போது பேசிய விஜய்,
“உங்களுக்கு வீட்டில் ஏதாவது வேண்டும் என்றால் அடம்பிடித்துச் சாதிப்பது போல்,
2026 தேர்தலில் விஜய்க்கு வாக்களிக்க வேண்டும் என்று வீட்டில் உள்ள பெரியவர்களிடம்
குழந்தைகள் அடம் பிடிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து,
சமூக வலைதளங்களில் குழந்தைகள் அழுதுகொண்டே தங்கள் பெற்றோரை விஜய்க்கு வாக்களிக்கச்
சொல்லி வற்புறுத்தும் வீடியோக்கள் பரவலாக வெளியாகின. இந்த வீடியோக்கள் எல்லாமே விஜய்
டீம் உருவாக்கி, பரப்பியதாக சொல்லப்படுகிறது.
எனவே தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் இந்தியத் தேர்தல்
ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், ’’கடந்த 2023ம் ஆண்டு குழந்தைகளை
அரசியல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தக் கூடாது எனத் தேர்தல் ஆணையம் விதிகளை வகுத்துள்ளது.
விஜய் இந்தப் பிரச்சார விதிகளை வெளிப்படையாக மீறியுள்ளார். விஜய்யின் பேச்சால் ஈர்க்கப்பட்டு
குழந்தைகள் வீடுகளில் சண்டையிடுவதும், சாப்பிட மாட்டேன் என அடம் பிடிப்பதும் அவர்களுக்கு
மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. குழந்தைகளை வைத்து ‘எமோஷனல் பிளாக் மெயில்’
செய்யும் வகையிலான ரீல்ஸ், ஷார்ட்ஸ் வீடியோக்களை உருவாக்குவதை விஜய் உடனடியாக நிறுத்த
வேண்டும்’’ எனக் கூறப்பட்டுள்ளது.
குழந்தைகள் உரிமைகள் கண்காணிப்பகம் சார்பில் நடிகர் விஜய்க்கும்
கண்டனக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், குழந்தைகளை அரசியலுக்குப் பயன்படுத்துவது
அவர்களின் உரிமைகளைப் பாதிக்கும். இந்த விவகாரத்தில் விஜய் பொது மக்களிடம்
பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். உணர்ச்சிரீதியான மிரட்டல் வீடியோக்கள் மற்றும்
சமூக வலைதளப் பதிவுகளைப் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விஜய் திருச்செந்தூர் சென்று கோயிலில் சிறப்பு பூஜை
நடத்தி திரும்பியிருக்கிறார். இது குறித்து பேசுபவர்கள், ‘’விஜய் ஜாதகப்படி செவ்வாய்
நீசம். பல்வேறு மரணங்கள்,நில பிரச்சினை, தைரிய குறைவு, திருமண வாழ்க்கை போராட்டம் போன்ற
பல பிரச்சினைகள் உள்ளன. செவ்வாய்க்கிழமை அதிகாலையில் திருச்சேந்தூர் சென்று வழிபட்டால்
மனஅமைதி, குடும்ப சுகம் மற்றும் வெற்றி கிட்டும் என்று ஜோதிடர் அறிவுறுத்தியிருந்தார்.
இதற்காகவே சிறப்பு பரிகார பூஜை நடத்தப்பட்டது’’ என்கிறார்கள்.
