Share via:
தமிழ் மொழியின் மீது எனக்கு அன்பும் பற்றும் உள்ளது என்று மேடைக்கு
மேடை முழங்கிவரும் பிரதமர் மோடி, இந்தி திணிப்பில் ரொம்பவே தீவிரமாக இருந்துவருகிறார்.
இதன் ஒரு கட்டமாக புதுவையில் இந்தி திணிக்கப்பட்டுவிட்டது.
புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ பள்ளிகளில் ஏற்கனவே மும்மொழிக் கொள்கையை
ரங்கசாமி அனுமதித்து விட்டார். மூன்றாவது மொழியாக இந்தியும் படிக்கலாம், பிரெஞ்சும்
படிக்கலாம் என்ற நிலை இருந்தது.. இப்போது ஆறாம் வகுப்பில் இருந்து இந்தி கட்டாயம் என்றும்
ஒரு வாரத்திற்குள் இதை அமல்படுத்த வேண்டும் என்றும் ஒன்றிய பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதோடு பிரெஞ்சு மொழி படிக்கலாம் என்ற வாய்ப்பை பறித்துவிட்டது.
இதையடுத்து பாஜகவின் ஆதரவாளர்களே அதிர்ந்து நிற்கிறார்கள். ஏனென்றால், இதே வழியில்
அடுத்து தமிழுக்கும் தடை போடப்படும்.
எனவே இதுகுறித்து, ‘’புதுச்சேரி அரசுப்பள்ளிகளில் பிரெஞ்ச் படிக்க
முடியாததோடு இந்தி கட்டாயமானது: மத்திய அரசு சொல்லிவிட்டார்கள் என்பதற்காக இங்கே செய்ய
வேண்டிய அவசியமில்லை; புதுச்சேரிக்கு மும்மொழி கொள்கை அவசியமில்லாத ஒன்று’’ என்று அத்தனை
கட்சிகளும் கொதிக்கின்றன.
தேர்தல் முடிந்தவுடன் பாஜக தன் நிஜ முகத்தை காட்டத் துவங்கி இருக்கிறது
என்பதுதான் உண்மை. அதொடு, இந்திய ரயில்வேயில் 29,608 வேலை வாய்ப்புகளைக் குறைப்பதாக
ஒன்றிய பாஜக அரசு அறிவித்துள்ளது. இதனால் தெற்கு ரயில்வேயில் 2000 பணியாளர்கள் பணிநீக்கம்
செய்யப்பட இருக்கிறார்கள்.
இன்னொரு வகையில் மாநில உரிமை பறிப்பு அறிவிப்பு வந்திருக்கிறது.
அதாவது, இந்தியாவில் உள்ள ஒன்றிய அரசுக்கு
சொந்தமான அனல் மற்றும் அணு மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தின் பெரும்
பகுதி அந்த மின் நிலையங்கள் அமைந்துள்ள மாநில அரசுகளுக்கே குறைந்த விலையில் வழங்கப்பட்டு
வந்தது. இப்போது இந்த நிலையை திடீரென்று ஒன்றிய ஆட்சி மாற்றி உள்ளது..
உற்பத்தி செய்யப்படும் ஒட்டுமொத்த மின்சாரத்தையும் போட்டி ஏலமுறையில்
விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்ய முடிவு எடுத்து உள்ளார்கள்.. இந்தப் போட்டி ஏலமுறையால்
பல மடங்கு கூடுதல் விலை கொடுத்து தமிழ்நாடு அரசு மின்சாரத்தை வாங்க வேண்டிய கட்டாயம்
உருவாகியுள்ளது.
தமிழ்நாடு என்ன செய்யப்போகிறது?