Share via:
2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை மறுநாள் (ஏப்.12ம் தேதி) தமிழகம் வருகிறார். இது குறித்த தகவல் தற்போது தமிழக பா.ஜ.க.வினர் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏப்ரல் 17ம் தேதி மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய உள்ளதால், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், நட்சத்திர பேச்சாளர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் 2 நாள் தேர்தல் பிரசாரம் செய்து முடித்துள்ள நிலையில், அடுத்தபடியாக மத்திய அமைச்சர் அமித்ஷா தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி வருகிற 12ம் தேதி (நாளை மறுநாள்) தமிழகம் வர உள்ளார்.
வெள்ளிக்கிழமை மாலை மதுரைக்கு வர உள்ள அமித்ஷா, சிவகங்கையில் நடைபெற உள்ள ரோடு ஷோவில் பங்கேற்று மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க உள்ளார். மறுநாளான 13ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் காலை 9.30 மணிக்கு ரோடு ஷோ மேற்கொள்கிறார்.
அதன் பின்னர் பிற்பகல் 3 மணியளவில் நாகையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேச உள்ள அமைச்சர் அமித்ஷா, மாலை 6.30 மணிக்கு தென்காசியில் நடைபெற உள்ள ரோடுஷோவில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள உள்ளனர்.