Share via:
வலுக்கட்டாயமாக ஸ்டாலின் அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளார்.
அடுத்து நடைபெற இருக்கும் அரசியல் விஜய் வெர்சஸ் உதய் என்று மாறியிருப்பது அரசியல்
பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.
இதையொட்டி திமுக சட்டமன்றக் கட்சியின் தலைவராக உதயநிதி ஸ்டாலின்
தேர்வு செய்யப்பட்டுள்ளார். உதயநிதிக்கு இது முக்கியமான பொறுப்பு. ஏனென்றால் விஜய்
தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைத்திருந்தாலும் திமுகவின் கூட்டணிக் கட்சிகளின் உதவியாலே
ஆட்சி அமைத்திருக்கிறார்.
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி காங்கிரஸ் முதல் கட்சியாக
தவெகவுடன் கூட்டணி வைத்தது. திமுக கூட்டணியில் இருக்கும் சிபிஐ, சிபிஎம், விசிக மற்றும்
ஐ.யூ.எம்.எல். ஆகியவை வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்துள்ளன. காங்கிரஸ் தவிர மற்றவர்கள்
இன்னமும் திமுக கூட்டணியில் தொடர்வதாகவே அறிவித்துள்ளனர்.
விஜய் பதவி ஏற்க முடியவில்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு
திமுக தயாராக இருந்தது. ஆனால், அதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரியவந்ததும் திமுக சட்டமன்றக்
கட்சியின் தலைவர், துணைத் தலைவர், கொறடா உள்ளிட்ட விவரங்களை திமுக வெளியிட்டுள்ளது.
அக்கூட்டத்தில், தி.மு.க. சட்டமன்றக் கட்சியின் தலைவராக உதயநிதி
ஸ்டாலினும், துணைத் தலைவராக கே.என்.நேருவும், கொறடாவாக எ.வ. வேலுவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது விஜய்க்கும் உதய்க்கும் நேரடிப் போட்டி ஆரம்பமாகியுள்ளது.
ஸ்டாலின் ஓரங்கட்டப்பட்டுவிட்டார். 75 ஆண்டு கால திமுகவால் புதிய புயல் விஜய்யைத் தாக்குப்பிடிக்க
முடியுமா என்று பார்க்கலாம்.
