Share via:
நிலவின் தென்துருவத்தில் இன்று சூரிய ஒளி விழ உள்ளதால் உறக்கத்தில் இருக்கும் லேண்டரை மீண்டும் இயக்குவதில் இஸ்ரோ தனது முழு முயற்சியை மேற்கொண்டு வருவது உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.
கடந்த ஜூலை 14ம் தேதி எல்.வி.எம்.3 ராக்கெட் மூலம் சந்திராயன் 3 விண்கலம் பகல் 2.35 மணிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது. இது கடந்த ஆகஸ்டு மாத்ம 23ம் தேதி மாலை 6.04 மணியளவில் புவி மற்றும் நிலவின் வட்டப்பாதையை கடந்து விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் 40 நாட்கள் பயணத்தை முடித்து நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியது.
உலக விஞ்ஞானிகளை இருக்கையின் நுணிக்கே கொண்டு வரும் தருணமாக தரை இறங்கிய 2 மணி நேரத்திற்குபிறகு விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியே வந்து தனது ஆய்வுப்பணிகளை செவ்வனே செய்து வருகிறது.
அந்த ஆய்வில் ரோவரில் பொருத்தப்பட்டிருந்த லிப்ஸ் எனப்படும் ஸ்பெக்ட்ரோஸ்கோப் கருவி, நிலவில் கந்தகம் இருப்பதை உறுதி செய்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல், அலுமினிய், கால்சியம், இரும்பு, குரோமியம் உள்ளிட்ட கனிமங்களும் நிலவில் இருப்பதை ரோவர் உறுதி செய்து பல்வேறு கோணங்களில் இருந்து புகைப்படங்களையும் எடுத்து அனுப்பியுள்ளது.
நிலவுநாள் (14 நாட்கள்) முடிவடைந்து அங்கு இரவு தொடங்கிய போது ரோவர் எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல் உறக்க நிலைக்கு சென்றது. மேலும் விக்ரம் லேண்டரும் உறக்கநிலைக்கு சென்றது.
அந்த நேரத்தில் ரோவரில் பொருத்தப்பட்டுள்ள சோலார் தகடுகள் நிலவில் முதல் 14 நாட்கள் சூரிய வெளிச்சத்தால் சார்ஜ் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
இந்நிலையில் நிலவின் தென் துருவத்தில் சூரிய ஒளிபட உள்ளது. அந்த நேரத்தில் உறக்க நிலையில் இருக்கும் ரோவர் மற்றும் லேண்டரை விழிப்பு நிலைக்கு கொண்டு வர இஸ்ரோ விஞ்ஞானிகள் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஏனெனில் நிலவு தற்போது 200 டிகிரி உறைபடி தட்பவெட்பநிலையில் சூழப்பட்டுள்ள போது ரோவர் மற்றும் லேண்டரின் உபகரணங்கள் வேலை செய்யும் வாய்ப்புகள் குறைவாக உள்ளது என்று விஞ்ஞானிகள் ஒருபுறம் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் இன்று (செப்.22) சூரிய உதயம் ஆரம்பிக்கும் போது, உறக்க நிலையில் இருக்கும் ரோவர் மற்றும் லேண்டர் விழித்தெழுந்து தனது ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வின் போது மேலும் பல்வேறு தகவல்களை ரோவர், பெங்களூரில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்திற்கு புகைப்படமாக எடுத்து அனுப்பும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்வை இஸ்ரோ விஞ்ஞானிகள் மட்டுமல்லாது சர்வதேச விஞ்ஞானிகளும் மிகவும் உன்னிப்பாக பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

