Share via:
நெய்வேலியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதிஸ்டாலின், சனாதனத்தை ஒழிக்க 100 ஆண்டுகள் ஆனாலும் தொடர்ந்து குரல் கொடுப்போம் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசியது தற்போது இந்தியாவின் மிகப்பெரிய பேச்சுப் பொருளாக மாறியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 260க்கும் மேற்பட்டோர் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் இன்னும் இந்த பேச்சு ஓய்ந்த பாடில்லை.
அதன்படி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நெய்வேலியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவர் பேசும்போது, 100 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரவும், மருத்துவ படிப்பு படிக்கவும் அனுமதிக்கப்படவில்லை. மருத்துவமனைக்கு கூட செல்ல முடியாத நிலையில் இருந்தனர். மேலும் கணவன் இறந்துவிட்டால் உடன்கட்டை ஏற வேண்டும் என்ற அவலநிலையும் இருந்தது. இதையெல்லாம் உடைத்தது தி.மு.க. தான்.
சனாதானத்தை ஒழிக்க வேண்டும் என்று அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் போன்றவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்தார்கள். சனாதனம் குறித்து அவர்கள் என்ன பேசினார்களோ அதையேதான் நானும் பேசினேன்.
200 ஆண்டுகளாக நாம் பாடுபட்டுக் கொண்டிருப்பது இந்த சனாதனத்தை ஒழிக்கத்தான். இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் தொடர்ந்து குரல் கொடுப்போம் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
கடந்த 9 ஆண்டுகால பா.ஜ.க.வின் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை மூடிமறைப்பதற்காகவே, நான் பேசிய சனாதனத்தை பொய் புகாராக மாற்றி வைத்திருக்கிறார்கள் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டி பேசினார்.