Share via:
2 மாத கர்ப்பிணியாக இருந்த மனைவியை கணவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அமெரிக்கா சிகாகோவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் உழவூரைச் சேர்ந்த மீரா என்ற 32 வயதான பெண், தனது கணவர் அமல்ரெஜி மற்றும் 3 வயது குழந்தையுடன் அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் வசித்து வருகிறார். இதில் மீரா தற்போது 2 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், நேற்றிரவு கணவர் அமல் மீராவை திடீரென்று துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த சிகாகோ போலீசார் விரைந்து சென்று படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மீராவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன் பின்னர் கணவர் அமல் ரெஜியை கைது செய்தனர்.
இது குறித்து நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில், குடும்பத்தகராறு காரணமாக அமல் ரெஜி, மீராவின் தாடை மற்றும் வயிற்று பகுதிகளில் சுட்டுள்ளார். இதை தனது முகநூல் பக்கத்திலும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். போலீசார் கைது செய்யப்பட்ட அமல் ரெஜியின் மொபைல் போனை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் மீராவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், வயிற்றில் ரத்தம் வெளியேறுவதற்கு அறுவை சிகிச்சை முடிந்துள்ளதாகவும், நுரையீரலில் வீக்கம் ஏற்பட்டுள்ளதால் மீரா சுவாசிக்க சிரமப்படுகிறார் என்றும் தெரியவந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.