Share via:
ஊழல் செய்ய மாட்டேன், ஊழல் செய்பவர்களை விடவும் மாட்டேன் என்று
கூறிய முதல்வர் விஜய், தவறு செய்த அதிகாரி மீது எடுத்திருக்கும் நடவடிக்கை மக்களுக்கு
பெரும் நம்பிக்கை கொடுத்துள்ளது.
இது குறித்து பேசும் சமூக ஆர்வலர்கள், ‘’தாம்பரம் மாநகராட்சியில்
இரண்டு சிலைகளை அமைச்சர் சரத்குமார் திறந்து வைக்கிறார். இந்த இரண்டு சிலைகளுக்கும்
போடப்பட்ட டெண்டர் திறக்கப்படுவதற்கு முன்பாகவே சிலைகளுக்கு திறப்பு விழாவை நடத்தி
முடித்து இருக்கிறார்கள். அதாவது டெண்டர் திறந்து இரண்டு மாதத்தில் முடிக்க வேண்டிய
வேலையை டெண்டர் திறப்பதற்கு 25 நாட்களுக்கு முன்பும், 14 நாட்களுக்கும் முன்பும் முடித்து
திறந்து வைத்து சாதனை படைத்துள்ளார்கள்.
ஒரு அமைச்சர் ஒரு அரசாங்க பணியை திறந்து வைக்க போகிறார் என்றால்
அந்த பணி குறித்த அடிப்படை தகவல் அவரிடம் இருக்க வேண்டாமா? ஊழல் நடக்க கூடாது என்ற
அக்கறை இருந்திருந்தால் அந்த பணிக்கான டெண்டர்களை பற்றி கேட்டு தெரிந்திருக்க வேண்டாமா?
டெண்டர் திறக்கபடாமலேயே ஒரு வேலையை முடித்திருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு எந்த
அளவிற்கு திமிரும் தைரியமும் இருந்திருக்க வேண்டும். அந்த தைரியத்தை அவர்களுக்கு கொடுப்பது
யார்?
அவசர கால டெண்டர் தவிர மற்ற எந்த டெண்டர்களுக்கும் ஒப்பந்ததாரர்களை
முன்பே முடிவு செய்து டெண்டர் கொடுக்கப்பட கூடாது என்று அரசாங்கம் பிறப்பித்துள்ள உத்தரவை/விதியை
பின்பற்றாமல் இப்படி ஊழல் செய்பவர்களுக்கு என்ன தண்டனை அளிக்க போகிறார்? தாம்பரம் மாநகராட்சி
ஆணையர் சஸ்பெண்ட் செய்யப்படுவாரா? இந்த செட்டிங் டெண்டர் வேலையை செய்த ஒப்பந்ததாரர்
பிளாக்லிஸ்ட் செய்யப்படுவாரா?’’ என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்த நிலையில், தாம்பரம் மாநகராட்சியில் இரண்டு பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி
கோரப்பட்ட நிகழ்வில் அறப்போர் இயக்கத்தினால் குறிப்பிடப்பட்ட குறைபாடுகள் மீது நகராட்சி
நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களால்
முதற்கட்ட விசாரணை செய்யப்பட்டு அதன் தொடர்ச்சியாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன்படி தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் ஐஏஎஸ் அவர்கள் மீது கொடுத்த டெண்டர்
முறைகேடு புகாரின் அடிப்படையில் அவர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இது மட்டும் போதாது அமைச்சர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்
என்று குரல் கொடுக்கிறார்கள்.

