Share via:
தமிழ்நாட்டில் புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ள சூழலில், சென்னை
தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தின் (CMO) பல்வேறு அரசுத் துறைகளைக்
கவனிக்கும் பொறுப்புகள், முதலமைச்சரின் செயலாளர்கள் மற்றும் கூடுதல் செயலாளருக்குப்
பிரித்து வழங்கி அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, முதலமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளர் / செயலாளர்-I
ஆக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் பி. செந்தில்குமார், ஐ.ஏ.எஸ் அவரிடம் நிதித்துறை, உள்துறை,
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, பொது மற்றும் மறுவாழ்வுத் துறை, நகராட்சி நிர்வாகம்
மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, பொதுப்பணித்துறை
மற்றும் லஞ்ச ஒழிப்பு ஆணையம் உள்ளிட்ட 10 முக்கியத் துறைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
முதலமைச்சரின் செயலாளர்-II ஆக நியமிக்கப்பட்டுள்ள திருமதி ஜி.
லட்சுமி பிரியா, ஐ.ஏ.எஸ் அவரிடம் முதலமைச்சர் அலுவலகத்தின் ஒட்டுமொத்த நிர்வாகம், உயர்
கல்வித்துறை, பள்ளிக்கல்வித் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சி
மற்றும் ஊராட்சித் துறை உள்ளிட்ட சமூக நலன் மற்றும் கல்வி சார்ந்த பிரிவுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும், முதலமைச்சரின் செயலாளர்-III ஆக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர்
ஏ. அண்ணாதுரை, ஐ.ஏ.எஸ் அவரிடம் இயற்கை வளங்கள் துறை, நீர்வளத்துறை, வேளாண்மை மற்றும்
உழவர் நலத்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, போக்குவரத்துத்
துறை மற்றும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை உள்ளிட்ட 12 துறைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
முதலமைச்சரின் கூடுதல் செயலாளரான திரு வி. விஷ்ணு, ஐ.ஏ.எஸ் அவரிடம்
வணிகவரி மற்றும் பதிவுத்துறை, சுற்றுலா மற்றும் அறநிலையத்துறை, குறு, சிறு மற்றும்
நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை (MSME), தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள்
துறை மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை உள்ளிட்ட 9 முக்கியத்
துறைகளும் பிரித்து வழங்கப்பட்டுள்ளன.
முதலமைச்சரின் புதிய நிர்வாகப் பணிகள் தடையின்றி வேகமெடுக்கும்
பொருட்டு, இந்தத் துறை ஒதுக்கீடுகள் மே 12 முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்
இந்த முறையான அறிவிப்பு வெளியாகியுள்ளது