Share via:
தமிழகத் தேர்தல் நடந்துமுடிந்துவிட்டது. இந்த நிலையில் பிற மாநிலங்களில்
நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கெடுக்குமாறு இந்தியா கூட்டணி தலைவர்கள்
ஸ்டாலினுக்கு விடுத்திருக்கும் அழைப்பு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
கலைஞரைப் போன்று எனக்கு பேச்சாற்றல், எழுத்தாற்றல் கிடையாது என்று
வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டவர் ஸ்டாலின். ஆனாலும், தனக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பை
ஏற்றுக்கொள்ள முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
தமிழக தேர்தலுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தேசிய
தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பலரும் வந்து வாக்கு சேகரித்தார்கள். ஆகவே, பதில்
கடமையாக வட மாநிலங்களில் சென்று பிரசாரம் செய்வதற்கு ஸ்டாலின் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்தியா முழுவதும் இல்லை என்றாலும் மும்பை, கொல்கத்தா, டெல்லி
ஆகிய இடங்களில் நிச்சயம் கலந்துகொள்வதாக உறுதி அளித்திருக்கிறாராம். தமிழில் மட்டுமே
பேசுவேன் என்றும் மொழிபெயர்ப்பாளர் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறாராம்.
தென் மாநிலங்களிலும் பங்கெடுக்க வேண்டும் என்று விடுத்திருக்கும்
கோரிக்கையை ஸ்டாலின் இன்னமும் ஏற்கவில்லையாம். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய
நான் என்று வட மாநிலங்களில் இனி ஸ்டாலின் குரலைக் கேட்கலாம் என்று உடன்பிறப்புகள் மகிழ்ச்சி
அடைகிறார்கள்.