Share via:
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரை பிரபலப்படுத்தும் முயற்சியில் புதிய பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது ஐ.சி.சி. நிறுவனம்.
13வது 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அடுத்த மாதம் (அக்டோபர்) 5ம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 19ம் தேதி வரை நடக்கிறது.
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கும் இப்போட்டி தொடரை காண ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்திருக்கின்றனர். உலகக்கோப்பை தொடரின் தொடக்க ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெற உள்ள நிலையில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. அதைத்தொடர்ந்து சென்னையில் நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ளது.
இந்நிலையில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை பிரபலப்படுத்த ஐ.சி.சி.முடிவெடுத்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி ‘தில் ஜாஷ்ன் போலோ’ என்ற பாடலை ஐ.சி.சி. தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இப்பாடலுக்கு இசையமைப்பாளர் ப்ரீதம் இசையமைத்துள்ளார்.
மிகவும் வண்ண மயமான இந்த பாடலில் பாலிவுட் நடிகர் ரண்வீர் சிங் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் சாஹலின் மனைவி தனஸ்ரீவர்மாவும் நடனமாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது அனைத்து கிரிக்கெட் ரசிகர்களாலும் டிரெண்டிங்காக்கப்பட்டு வருகிறது.

