Share via:
தமிழக அரசியல் களத்தில் தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் கடுமையான
மோதல் நடைபெற்று வருகிறது. முதல்வர் ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக தாக்கிவரும்
வேளையில், ஸ்டாலினை ஏழரை சனி என்று கடுமையாகப் பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
திருவண்ணாமலை சேவூரில், ஆரணி தொகுதி அதிமுக வேட்பாளர் கஜேந்திரனை
ஆதரித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘’இந்த ஆரணி மக்களவைத் தொகுதியில் 4 சட்டப்பேரவை
தொகுதிகள். விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு சட்டப்பேரவை தொகுதி. இந்த 6 சட்டமன்றத்
தொகுதிகளின் பிரதான தொழில் விவசாயம். இப்பகுதியில் வாழும் மக்கள் விவசாயத்தை நம்பி
வாழ்கின்றனர். பட்டு மற்றும் நெசவுத் தொழிலை நம்பி வாழ்கின்றனர்.இந்தத் தொழில்கள் அனைத்தும்
அதிமுக ஆட்சியில் சிறப்பாக நடந்தது. ஆனால், இப்போது இந்தத் தொழில்கள் அனைத்தும் நலிவடைந்து
விட்டது. இந்தத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் வெற்றி பெற்றால்,
உங்களுடைய குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்.
இந்தியாவிலும் தமிழகத்திலும் எத்தனையோ கட்சிகளும், தலைவர்களும்
உள்ளனர். ஆனால், அதிமுக தலைவர்களைப் போல கிடையாது. அதிமுகவின் இருபெரும் தலைவர்களான
எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் இன்றுவரை மக்கள் மனதில் தெய்வமாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களது
ஆசி இருக்கும் வரை, முதல்வர் ஸ்டாலினைப் போல ஆயிரம் பேர் பிறந்து வந்தாலும் அதிமுகவைத்
தொட்டுக்கூடப் பார்க்க முடியாது.
கைத்தறி, நெசவு பட்டுத் தொழிலுக்கு திமுக அரசு பொறுப்பேற்றதில்
இருந்து சரியான விலை கிடைப்பது இல்ல. பட்டுத் துணிகளை விற்பனை செய்ய முடியாமல் பலர்
சிரமப்பட்டு வருகின்றனர். இந்த ஆட்சி எப்போது வந்ததோ, ஸ்டாலின் எப்போது முதல்வர் ஆனாரோ,
அப்போதே தமிழகத்துக்கு சனி பிடித்துக்கொண்டது. இந்த ஏழரை சனி இத்தேர்தலில் அகற்றப்பட
வேண்டும். முதல்வர் ஸ்டாலினின் ஆட்சி ஒரு பொம்மை முதல்வரின் ஆட்சி. அதனால்தான், எந்த
தொழிலுமே செய்ய முடியாத ஒரு அவல நிலை தமிழகத்தில் நிலவுகிறது.
கருணாநிதி குடும்பம் என்ன மன்னர் குடும்பமா? கருணாநிதி முதல்வராக
இருந்தார், ஸ்டாலின் முதல்வராக இருக்கிறார். அடுத்தது, உதயநிதியை முதல்வராக்க முயற்சிக்கிறார்.
அது நடக்காது, அது வேற விஷயம். ஏன் திமுகவில் வேறு ஆளே இல்லையா? திமுகவில் வேறு ஆட்களே
கிடையாது. அனைத்து கட்சிகளும் கட்சிகளைப் போல இயங்குகின்றன. ஆனால், திமுக கார்ப்பரேட்
கம்பெனி போல இயங்குகிறது’’ என்று ஆவேசம் காட்டியிருக்கிறார்.
ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று பார்க்கலாம்.