Share via:
நடிகை விஜயலட்சுமி விவகாரம் தொடர்பாக போலீஸ் சம்மன் அனுப்பிய நிலையில் நடிகர் சீமான் ஆஜராகவில்லை என்ற தகவல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிவிட்டதாகவும், 7முறை கருக்கலைப்பு செய்ய தூண்டியதாகவும் நடிகை விஜயலட்சுமி காவல்நிலையத்தில் புகார்மனு அளித்திருந்தார்.
நீண்ட காலமாகவே புகைந்து கொண்டிருந்த விஜயலட்சுமி& சீமான் விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் அவரிடம் போலீசார் 8 மணிநேரம் விசாரணை நடத்தினர். அதன் பின்னர் திருவள்ளூர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் நடிகை விஜயலட்சுமி வாக்குமூலம் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து நடிகை விஜயலட்சுமி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
இதன் தொடர்ச்சியாக சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என்று கடந்த 9ம் தேதி சென்னை வளசரவாக்கம் போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பினர். அன்றைய தினம் வெளியூர் செல்ல இருப்பதால் தான் வருகிற 12ம் தேதி ஆஜராவதாக சீமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் இன்று காலை (12ம் தேதி) காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டிய சீமான் ஆஜராகாமல்,அவரது வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சங்கர் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் சங்கர் கூறும்போது, சில காரணங்களால் சீமானால் ஆஜராக முடியவில்லை. எங்களிடம் சீமான் 2 கடிதங்களை கொடுத்து அனுப்பியுள்ளார் என்று தெரிவித்தனர்.
மேலும் இதற்கு முன்னர் விஜயலட்சுமி, சீமான் மீது கொடுத்த வழக்கை வாபஸ் பெற்றது ஏன்? தற்போது மீண்டும் வழக்கு தொடர்ந்தது ஏன் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை வழக்கறிஞர் சங்கர் முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.