Share via:
கோடை காலத்தில் மின் தேவைகள் அதிகரித்து வருகின்றன. வெயிலின் தாக்கம்
அதிகரித்துள்ள நிலையில், நடப்பாண்டு தினசரி மின் நுகர்வு 19 ஆயிரம் மெகா வாட்டுக்கும்
மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் 1-ம் தேதி தமிழகத்தில் தினசரி மின் நுகர்வு 383.52 மில்லியன்
யூனிட். இதில் மத்திய கிரிட் ( மின் கட்டமைப்பு ) மூலம் 209.52 மில்லியன் யூனிட், அனல்
மின் நிலையத்தால் 94.75, ஹைட்ரோ திட்டத்தில் 7.11, காஸ் 5.55, காற்றாலை 22.26, சூரிய
ஒளி 32.2, பையோ திட்டத்தில் 12.14 மில்லியன் யூனிட் வீதம் மின் உற்பத்தி கிடைத்துள்ளது.
இதனால் மின்தேவை 383.52 மில்லியன் யூனிட் என்ற நிலையில் அன்றைய தினம் 385.61 மில்லியன்
யூனிட் தமிழகத்தில் இருந்தது.
எதிர்வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதால்,
மின் விநியோகம் சீராக இருப்பதை தமிழ்நாடு மின் வாரியம் உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள்,
தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர் இந்தாண்டு தினசரி மின்நுகர்வு
19 ஆயிரம் மெகாவாட் முதல் 20 ஆயிரம் மெகாவாட் வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களைத்
தவிர்த்து, பல்வேறு மாவட்டங்களில் தினமும் ஒரு மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை அறிவிக்கப்படாத
மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன என்று டாக்டர் ராமதாஸ்
அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும், ‘மின் அழுத்தக் குறைவால் வீடுகளில் உள்ள குளிரூட்டிகள்,
மின் விசிறி ஆகியவற்றை இயக்க முடியாமல், மக்கள் உறங்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
கோடைக்காலத்தில் தமிழகத்தின் மின்சாரத் தேவை அதிகரிக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
அதற்கேற்ற வகையில் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களிடமிருந்து மின்சாரம் வாங்குவதற்காக
ஒப்பந்தங்களை தமிழ்நாடு மின்சார வாரியம் செய்திருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் 17,970 மெகாவாட் அனல் மின்திட்டங்களை அடுத்த 10
ஆண்டுகளில் செயல்படுத்தப் போவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. நிலுவையில் உள்ள மின்திட்டங்கள்
அனைத்தும் விரைவாக செயல்படுத்தப்பட்டு, தமிழ்நாட்டில் மின்வெட்டைத் தடுக்க தமிழக அரசு
நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.