Share via:
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் சென்னை
பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் ரூ. 393.74 கோடி செலவில் செங்கல்பட்டு மாவட்டம்,
கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்தியாவின் மிகப் பெரிய
பேருந்து முனையங்களுள் ஒன்றான கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை இன்று தமிழக முதல்வர்
மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இனி, தென் தமிழகம் நோக்கி செல்லும் பேருந்துகள், கோயம்பேட்டில்
உள்ள சென்னைப் புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து கிளாம்பாக்கத்தில் உள்ள புதிய கலைஞர்
நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கு மாற்றப்படும். ஆகவே, தென் தமிழகம் செல்லும் மக்கள்
கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் செய்வதற்குப் பதிலாக வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்துக்குச்
செல்ல வேண்டியிருக்கும்.
இந்த புதிய பஸ் ஸ்டாண்டில் எக்கச்சக்க புதிய வசதிகள் இருக்கின்றன.
இந்த பேருந்து நிலையம் முழு பயன்பாட்டுக்கு வரும்போது தினமும் 1 லட்சம் மக்கள் பயணிப்பார்கள்
என்று சொல்லப்படுகிறது. இதற்குள் மருத்துவமனை, 4 உணவகங்கள் மற்றும் 100 கடைகள் அமைந்திருக்கின்றன.
6 ஏக்கர் நிலப்பரப்பில் எழில்மிகு நீரூற்று, நடைபாதையுடன் கூடிய
பூங்கா இப்பேருந்து முனையத்துக்கு எழில் சேர்க்கிறது. இங்கிருந்து சுமார் 2300 பேருந்துகள்
தினமும் இயக்கப்படும் என்று தெரிகிறது. இதன் காரணமாக தாம்பரம் பகுதியிலிருந்து சென்னைக்குள்
வரும் பேருந்துகள் எண்ணிக்கை குறையும் என்பதால் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம், கிளாம்பாக்கத்திலிருந்து வட சென்னை மற்றும் மத்திய
சென்னைக்குச் செல்லும் மக்கள் கூடுதலாக சில மணி நேரம் பயணிக்க வேண்டியிருப்பது சிக்கலாகியிருக்கிறது.
ஆகவே, குறைந்தபட்ச சில பஸ்கள் கோயம்பேடு வரை இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளன.