Share via:
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் இன்று அதிகாலை திடீரென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
டிஷ்யூம், காதலில் விழுந்தேன், வேட்டைக்காரன், அங்காடித் தெரு உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து விஜய் ஆண்டனி மற்ற இசையமைப்பாளர்களுக்கு கடும் போட்டியாளராக இருந்து வருகிறார். இசையமைப்பதோடு சேர்த்து காளி, நான், சைத்தான், சலீம், பிச்சைக்காரன்1, பிச்சைக்காரன்2, கொலை உள்ளிட்ட பல்வேறு படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களிலும் நடித்து தன்னை ஒரு கதாநாயகனாகவும் அடையாளப்படுத்திக் கொண்டார்.
விஜய் ஆண்டனி சென்னை டி.டி.கே. சாலையில் உள்ள வீட்டில் மனைவி பாத்திமா மற்றும் 16 வயதான மீரா என்ற மகளுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் விஜய் ஆண்டனியின் மகள் மீரா இன்று அதிகாலை 3 மணியளவில் தன்னுடைய வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு கொண்டார். உடனடியாக மீட்கப்பட்ட மீரா அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மீரா வரும் வழியில் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று மீராவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் மீரா கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக தெரியவந்துள்ளது. இருப்பினும் மீராவின் இந்த திடீர் தற்கொலைக்கு என்ன காரணம் என்பது அடுத்த கட்டவிசாரணையில் தெரிய வரும்.
விஜய் ஆண்டனியின் 16 வயது மகள் திடீரென்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

