Share via:
விரைவில் நடக்கயிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் 15 முதல்
20 அதிமுக எம்.எல்.ஏ.க்களை ரிசைன் செய்யவைத்து, அங்கெல்லாம் வெற்றி அடைந்து, மெஜாரிட்டி
தவெகவாக ஆட்சி நடத்தவேண்டும் என்று ஆசைப்படுகிறார் விஜய். அவரது வலையில் தொடர்ந்து
சில எம்.எல்.ஏ.க்கள் விழுந்துவரும் நிலையில், பெரும்பாலோர் எடப்பாடி பழனிசாமியை நோக்கித்
திரும்பியிருக்கிறார்கள்.
வேலுமணி டீமாக இருந்த 25 எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை இப்போது
11 ஆகக் குறைந்துள்ளது. அந்த வகையில், எடப்பாடி பழனிசாமியை இன்னும் சந்திக்காத அதிமுக
எம்.எல்.ஏ.க்கள் 1) தொண்டாமுத்தூர் எஸ்.பி. வேலுமணி 2) மயிலம் சி.வி. சண்முகம் 3) நன்னிலம்
ஆர். காமராஜ் 4) பாலக்கோடு கே.பி. அன்பழகன் 5) பாப்பிரெட்டிப்பட்டி மரகதம் வெற்றிவேல்
6) பரமத்திவேலூர் சேகர், 7) சங்கராபுரம் ராகேஷ் 8) கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர் 9 )
ஜோலார்பேட்டை கே.சி. வீரமணி 10) லால்குடி லீமா ரோஸ் 11) விராலிமலை சி.விஜயபாஸ்கர் ஆகியோர்
மட்டும்தான்.
தவெகவுக்கு போய் அமைச்சராக முயற்சித்தது எஸ்.பி.வேலுமணி அணி. ஆனால்
அவர்களின் கட்சி பதவிகளை நீக்கி, சபாநாயகரிடம் புகார் அளித்தார் எடப்பாடி பழனிசாமி.
மேலும் தவெக அமைச்சரவையிலும் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் எஸ்.பி.வேலுமணி, எடப்பாடியுடன் மோதல் போக்கு என்பது
இல்லை என்று திடீரென பல்டி அடித்தார். இதையடுத்து எஸ்.பி.வேலுமணி சி.வி.சண்முகத்தின்
ஆதரவாளரான ஆற்காடு எம்.எல்.ஏ. சுகுமார், அந்தியூர் ஹரிபாஸ்கர், பண்ருட்டி கே.மோகன்,
சங்கரன்கோவில் திலீபன் ஜெயசங்கர், காங்கேயம் என்.எஸ்.என். நடராஜன் ஆகிய 5 எம்எல்ஏக்கள்
எடப்பாடியை சந்தித்து பேசி ஆதரவு தெரிவித்தனர்.
இந்த பரபரப்புக்கு மத்தியில் நேற்று இசக்கி முத்தையா எம்எல்ஏ ராஜினாமா
செய்தார். மேலும் 6 எம்எல்ஏக்களும் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்து விட்டு, தவெகவில்
இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நேற்று மாலையில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள
இல்லத்தில் எடப்பாடியை சந்தித்து எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்எல்ஏ பாலகிருஷ்ண ரெட்டி
ஆதரவு தெரிவித்தார். அவரை தொடர்ந்து எஸ்.பி.வேலுமணி தரப்பு ஆதரவு எம்எல்ஏக்களான நத்தம்
விஸ்வநாதன், ஹரி, அருண்மொழி தேவன், ரவி மனோகரன் மற்றும் தங்கமணி ஆகியோர் சந்தித்து
பேசினர். அப்போது இரு அணிகளும் இணைவது தொடர்பாக சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக
தகவல் வெளியாகியுள்ளது.
அப்போது பதவி பறிக்கப்பட்ட அனைவருக்கும் மீண்டும் அதே பதவி வழங்கப்படும்.
வழிகாட்டு குழு என்பது அமைக்கப்படாது. தோல்வி குறித்து ஆராய குழு அமைக்கப்படும். பொதுக்குழுவை
கூட்ட வலியுறுத்தக்கூடாது. தேவை ஏற்படும் போது மட்டுமே பொதுக்குழு கூட்டப்படும் என்று
எடப்பாடி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று அதிமுக விவகாரம் ஒரு தெளிவான முடிவுக்கு வரும் என்று சொல்லப்படுகிறது.
அதேநேரம் விஜய் டீமும் விடாமல் பேச்சுவார்த்தை நடத்தி ராஜினாமா செய்யக் கேட்டுவருகிறது.
யார் ஜெயிப்பார்கள் என்று பார்க்கலாம்.