Share via:
உலகக்கோப்பையின் மீது கால்களை வைத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்செல் மார்ஷ் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் கண்டனங்களை பெற்றதுடன் சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
13வது உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்த்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 241ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி அபாரமாக விளையாடி 6வது முறையாக உலகக்கோப்பையை வென்ற அணி என்ற பெருமையை தட்டிச் சென்றது.
ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் முன்னரே கூறியது போல், கிரிக்கெட் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அமைதியாக்கினார் என்பது சோசியல் மீடியாவில் பெரும் பேச்சுப்பொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் வீரர் மிட்செல் மார்ஷ், தனது ஓட்டல் அறையில் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தபடி, உலகக்கோப்பையின் மீது இரண்டு கால்களையும் வைத்து, ஒரு கையில் குளிர்பானத்தை பிடித்தபடி மறு கையில் வெற்றிக்களிப்பை வெளிப்படுத்தும்படி சைகை செய்து போஸ் கொடுத்துள்ளார்.
உலகக்கோப்பையின் மீது இரு கால்களையும் வைத்து மிட்செல் மார்ஷ் போட்டோ எடுத்துக் கொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையையும், சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உலகக்கோப்பையை அவமானப்படுத்தும் வகையில் மிட்செல் மார்ஷ் நடந்து கொண்டது குறித்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.