Share via:
அமைச்சர் உதயநிதி தனது 46வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (நவ.27) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பேசினார்.
தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் நினைவிடத்திற்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதே போல் முன்னாள் முதலமைச்சரும் தனது தாத்தாவுமான கருணாநிதியின் நினைவிடத்திலும் அமைச்சர் உதயநிதி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர் தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினையும் அவரது துர்கா ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதைத்தொடர்ந்து பெரியார் திடலில் அமைந்துள்ள பெரியார் நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி மலர்தூவி மரியாதை செலுத்திய பின்னர் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அதில் தி.மு.க. மூத்த முன்னோடிகள் 500 பேருக்கு பொற்கிழி வழங்கும் அவர், 500 மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் உபகரணங்களை வழங்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன், மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோர் கலந்து பங்கேற்கிறார்கள்.