Share via:
மகளிர் இட ஒதுக்கீடு குறித்து பேசிய கனிமொழி எம்.பி. அ.தி.மு.க. முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவை புகழ்ந்து தனது கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் முதன்முதலாக தாக்கல் செய்யப்பட்ட பெருமையை பெற்ற மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா குறித்து தி.மு.க. எம்.பி.கனிமொழி பேசும்போது, ‘‘இந்த மசோதாவை நாங்கள் ஏற்கிறோம். ஆதரிக்கிறோம். ஆனால் துரதிருஷ்டவசமாக பா.ஜ.க. இதனை அரசியலாக்குகிறது என்று தெரிவித்தார்.
மேலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் கடந்த 1996ம் ஆண்டு முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. பிரதமர் தேவகவுடா தலைமையிலான அரசு இந்த மசோதாவை அந்த காலகட்டத்தில் கொண்டு வந்தது. அதன்பிறகு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்திலும் இந்த மசோதா கொண்டு வரப்பட்டாலும் நிறைவேற்றப்படவில்லை.
ஆனால் மன்மோகன்சிங் ஆட்சி காலத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. அப்போது நான் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தேன். இருப்பினும் மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்படல்லை. தற்போது 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த மசோதாவை நான் ஆதரிக்கிறேன். இந்த மசோதா குறித்து பேசிக் கொண்டிருக்கிறோமே தவிர சட்டமாக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
இதற்கிடையில் மறைந்த அ.தி.மு.க முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசியுள்ளார். அவர் பேசும் போது ‘‘ஜெயலலிதா ஒரு வலிமையான தலைவர்தான்’’ என்று புகழாரம் சூட்டியுள்ளார். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, மறைந்த ஜெயலலிதாவை அவமரியாதையாக பேசி சர்ச்சையான நிலையில், தி.மு.க. எம்.பி. கனிமொழி, அவரை பற்றி புகழ்ந்து பேசியுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.