Share via:
ககன்யான் திட்ட மாதிரி முதல் கட்ட சோதனை வெற்றிகரமாக நடந்துள்ளதாக அறிவித்துள்ள இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், மனிதனை விண்ணுக்கு அனுப்பும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. இதே போன்ற முயற்சியை இதற்கு முன்னதாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டுள்ளதால் இந்தியாவின் அடுத்தகட்ட நகர்வுகளை அந்நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
இந்நிலையில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில், மனிதர்களை விண்ணுக்கும் அனுப்பும் ககன்யான் திட்டத்தில் முதல்கட்ட சோதனை அறிவித்தபடி நடத்தப்படவில்லை. மோசமான வானிலை காரணமாக 3 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று காலை 10 மணியளவில் வெற்றிகரமாக நடைபெற்றது.
அதன்படி ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலமான டிவி டி1 ராக்கெட் மூலம், தரையில் இருந்து 16.6 கிலோ மீட்டர் தூரம் வரை அனுப்பியது. அதன் பின்னர் அது மீண்டும் பாராசூட் மூலம் வங்கக்கடலில் இறக்கப்பட்டது. இந்த முதல்கட்ட சோதனை 20 நிமிடங்களில் செய்து முடிக்கப்பட்டது. விண்ணில் ஏவப்பட்ட 30 விநாடியில் ராக்கெட் இருந்து ககன்யான் விண்கலம் பிரிந்து சென்றது குறிப்பிடத்தக்கது.
இது குறித்த அனைத்து தகவல்களையும் மகிழ்ச்சியுடன் வெளியிட்ட இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு பாராட்டு குவிந்து வருகிறது. முதல்கட்ட சோதனை வெற்றியடைந்ததை போல ககன்யான் திட்டமும் வெற்றியடைய வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.