Share via:
தமிழகத்தில் காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல்
நடத்தப்படுவதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல்
ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து இப்போதே அனைத்துக் கட்சிகளும் களத்தில் இறங்கத்
துடிக்கின்றன.
போதிய பெரும்பான்மை இல்லாமல் நடந்துவரும் விஜய் அரசுக்கு இடைதேர்தலில்
5 தொகுதிகளையும் தட்டித் தூக்கினால், பிரகாசமான எதிர்காலம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
இதையடுத்து, 5 தொகுதிகளையும் தன்வசமாக்க விஜய் முயற்சி செய்கிறார்.
கடந்த சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு திருச்சி கிழக்கு தொகுதியில்
வெற்றி பெற்றிருந்த முதல்வர் விஜய், அந்தத் தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததைத்
தொடர்ந்து அத்தொகுதி காலியானது.
அதேபோல் அதிமுகவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெருந்துறை தொகுதி
உறுப்பினர் ஜெயகுமார், மதுராந்தகம் தொகுதி உறுப்பினர் மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதி
உறுப்பினர் சத்தியபாமா மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதி உறுப்பினர் இசக்கி சுப்பையா
ஆகியோர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அந்தத்
தொகுதிகளும் காலியாக அறிவிக்கப்பட்டன. சட்டப்படி, ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட
நாளில் இருந்து ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
இதன் அடிப்படையில், இந்த 5 தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல்
நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், தேர்தல் நடத்துவதற்கான நிர்வாக
ஏற்பாடுகளை வரும் 22ம் தேதிக்குள் நிறைவு செய்யுமாறு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு
தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இடைத்தேர்தல் நடைபெற உள்ள 5 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும்
அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த மாதத்தின்
இறுதியில் இடைத்தேர்தல் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சி கிழக்கு தவிர்த்து மீதமுள்ள நான்கு தொகுதிகளும் அதிமுக
ஜெயித்தவை. அங்கு ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் போட்டியிட முடியாத சூழல் நீதிமன்றத்தால்
உருவாகும் என்று சொல்லப்படுகிறது. ஆகவே, ஐந்து தொகுதிகளிலும் தவெக களம் இறங்கத் துடிக்கிறது.
ஆனால், இப்போது ஆட்சிக்கு முட்டுக்கொடுக்கும் காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள்
ஆளுக்கொரு தொகுதி எதிர்பார்க்கின்றனர்.
எதிர் அணியில் திமுக அனைத்து தொகுதியிலும் களம் இறங்கும் என்பது
உறுதியாகிவிட்டது. கொளத்தூரில் தோல்வி அடைந்த ஸ்டாலினை திருச்சியில் களம் இறங்கச் சொல்லி
நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். அதற்கு இப்போது வேண்டாம் என்று உறுதிபடத் தெரிவித்துவிட்டாராம்.
அதேநேரம், இந்த தொகுதியை மீண்டும் ஜெயிக்க வேண்டிய கட்டாயம் எடப்பாடி
பழனிசாமிக்கு இருக்கிறது. அவரது ஆளுமையைக் காட்ட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆனால்,
கட்சியின் முக்கியஸ்தவர்கள் பலரும் வெளியேறியிருப்பது, புதிய நிர்வாகிகள் துணையுடன்
ஜெயிக்க நினைப்பது பெரும் சவாலாக உள்ளது. ஆனாலும், ஐந்து தொகுதியிலும் போட்டியிட்டு
பலத்தைக் காட்ட இருக்கிறார்.
மும்முனைப் போட்டியில் ஜெயிக்கப்போவது யார் என்பது தமிழக அரசியலில்
மிகப்பெரும் திருப்புமுனையாக இருக்கப்போகிறது. திருச்சி தவிர கூடுதலாக ஒரே ஒரு தொகுதி
ஜெயித்தாலும் விஜய்க்கு வெற்றி என்றே திட்டமிடப்பட்டு வேலைகள் நடக்கின்றனவாம்.