Share via:
திமுவின் வாரிசு அரசியலை கடுமையாக விமர்சனம் செய்துவரும் எடப்பாடி
பழனிசாமியின் மகன் மிதுனை இப்போதே அரசியலுக்குள் கொண்டுவர வேண்டும் என்று நிர்வாகிகள்
பேசத் தொடங்கியிருப்பது தொண்டர்களுக்கு புதிய உற்சாகம் கொடுத்துள்ளது. இந்த இடைத்தேர்தலில்
போட்டியிட வேண்டும் என்று தலைமைக்குத் தகவல் அனுப்பிவருகிறார்கள்.
நேற்றைய தினம் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி காஞ்சிபுரம்
மாவட்ட நிர்வாகிகளை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில்
சந்தித்து ஆலோசித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகளான முன்னாள் எம் பி காஞ்சி பன்னீர்செல்வம்,
மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், பகுதிச் செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்டோர் பேசியபோது, எடப்பாடி
பழனிசாமியின் மகன் மிதுனை கட்சியின் இளைஞரணி அல்லது தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராக
நியமிக்க வலியுறுத்தினார்கள்.
இதற்கு எடப்பாடி பழனிசாமி உடனடியாக, இதுகுறித்து யாரும் பேச வேண்டாம்’
என்று தெரிவித்தார். ஆனாலும் அடுத்து பேசிய அதிமுகவின் துணை பொதுசெயலாளர் கேபி முனுசாமி,
‘’சட்டமன்றத் தேர்தலில் தோல்விக்கு பின், கட்சியை மறுகட்டமைப்பு செய்ய வேண்டிய கடமையும்
பொறுப்பும் நாம் அனைவருக்கும் இருக்கிறது. அதனால் கட்சிக்கு இளைஞரணி செயலாளராக மிதுனை
நியமிக்க வேண்டும் என்று சில நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். கட்சியின் நலன் கருதி மிதுன்
கட்சிக்குள் வர வேண்டும் என்று நினைத்தால் அதனை பொதுசெயலாளர் என்ற முறையில் தடுக்க
கூடாது’’ என்று பேசினார்.
இதற்கு எடப்பாடி பழனிசாமி எந்த பதிலும் சொல்லவில்லை. மிதுனை கட்சிக்குள்
கொண்டுவந்து பொறுப்பு கொடுத்தால் திமுகவின் வாரிசு அரசியலை பற்றி பேச முடியாது என்பதுதான்
எடப்பாடிக்கு உள்ள ஒரே நெருக்கடி.
மிதுன் அரசியலுக்கு வரவேண்டும் என்று நேற்று பேசப்பட்ட விவகாரம்
கட்சியினருக்கு புதிய உற்சாகம் கொடுத்துள்ளது. உதயநிதி, துரைவைகோ, அன்புமணி, விஜயபிரபாகரன்
எல்லாம் கட்சிக்கு வரும்போது மிதுன் வருவதில் என்ன தவறு என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
அதேபோல், ‘வரும் இடைத்தேர்தலில் மிதுனை நிறுத்துங்கள். மக்கள்
ஆதரவுடன் வெற்றி பெற்றுவிட்டால் அனைவரும் ஏற்றுக்கொண்டதாக அர்த்தமாகிவிடும். எனவே,
தயங்காமல் களத்தில் இறக்குங்கள்’ என்று கோரிக்கை வைக்கிறார்கள்.
ஆக, அடுத்த வாரிசு களம் இறங்குகிறது.
