Share via:
காசாவில் குழந்தைகள் மற்றும் பெண்களை குறிவைத்து கொலை செய்வதை இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த மாதம் (அக்டோபர்) 7ம் தேதி இஸ்ரேல்& ஹமாஸ் அமைப்பினருக்கு இடையிலான போர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. போருக்கு அஞ்சி 15 லட்சம் புலம்பெயர்ந்துள்ள நிலையில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதலில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ள நிலையில் அதில் 40 சதவீதம் பேர் குழந்தைகள் என்ற அதிர்ச்சி தகவலை ஐ.நா. வெளியிட்டுள்ளது. மேலும் 10 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை கொல்லப்படுவதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.நா. கொண்டு வந்த போர் நிறுத்த தீர்மானத்தையும் இஸ்ரேல் நிராகரித்ததோடு, ஹமாஸ் அமைப்பை உலகத்தைவிட்டே துடைத்தெறிவோம் என்று தனது நிலைப்பாட்டில் நிலையாக நின்று வருகிறது.
இதற்கிடையில் காசாவில் உள்ள மருத்துவமனைகளை ஹமாஸ் அமைப்பினர் பதுங்குத்தளமாக பயன்படுத்தி வருவதாக வெளியான வீடியோவை தொடர்ந்து காசாவில் உள்ள மருத்துவமனைகளில் இஸ்ரேல் ராணுவம் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறது. மருத்துவமனைகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் இருப்பதால், அவர்களுக்கு இஸ்ரேல் ராணுவம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடாது என்று சர்வதேச நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்நிலையில் கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, ‘‘போர் குறித்து அதிகபட்ச கட்டுப்பாடுகளை இஸ்ரேல் கடைபிடிக்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார். மேலும் உலகம் உங்களை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆயிரக்கணக்கான சாட்சிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெண்கள், குழந்தைகள், சிசுக்கல் கொல்லப்படுவதை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதை உடனே நிறுத்துங்கள்’’ என்று இஸ்ரேலை கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த பேட்டிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஹமாஸ் பயங்கரவாதிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளை தங்களது பாதுகாப்பு கவசமாக பயன்படுத்தி வருகின்றனர். கடந்த அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் தலை துண்டிக்கப்பட்டும் எரித்தும் கொல்லப்பட்டனர்.
பொது மக்கள் பின்னால் மறைந்து கொண்டு, பொது மக்களையே தாக்கும் இரட்டை போர்க்குற்றங்களில் ஈடுபடும் ஹமாஸ் அமைப்புதான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். இஸ்ரேல் கிடையாது’’ என்று தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.