Share via:
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களை முன்னிட்டு சென்னையில் மட்டும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதிலும் இன்று (செப்.18) விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் களைகட்டி வரும் விநாயகர் சதுர்த்தி தின விழாவில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க 4 ஆயிரம் இடங்களில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு எந்தெந்த இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டதோ அதோ போல் இந்த ஆண்டும் அதே இடங்களில் மட்டுமே பிள்ளையாரை வைத்து வழிபட அனுமதி வழங்கப்படும் என்று ஏற்கனவே காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் பக்தர்கள் சிலர் கூடுதலாக சிலைகளை வைத்து வழிபட போலீசாரிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதை ஏற்றுக் கொண்ட காவல்துறை ஒரு சில கூடுதல் இடங்களில் வழிபாடு நடத்த அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதனால் சென்னை மாநகரில் மட்டும் 10 ஆயிரம் போலீசார் 4 ஆயிரம் இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தாம்பரம், ஆவடியில் 10 ஆயிரம் போலீசார பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.