Share via:
இனி எக்ஸ் பயனாளிகளிடம் ஆண்டு சந்தா கட்டணம் வசூலிக்கப்படும் என்று எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உலகளவில் எக்ஸ் பக்க பயனாளர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர். எக்ஸ் தள பக்கத்தில் கருத்துகள், வீடியோக்கள், போட்டோக்கள் என பதிவேற்றம் செய்வதையும், புரமோஷன்களுக்கு பயன்படுத்துவதும் அதிகரித்து வருகிறது. மேலும் லைக் செய்வது, கமெண்ட் செய்வது, பாலோ செய்வது என ஆண்ட்ராய்டு போன்களில் எக்ஸ் பக்கத்தை டீபால்டாகவே பயனாளர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் பிரபல தொழிலதிபரும் எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான எலான்மஸ்க் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘நாட எ பாட்’’ என்று அழைக்கப்படும் புதிய சந்தா திட்டத்தின் கீழ், வலைதள பதிப்பில் லைக்குகளையும், மறுபதிவுகளையும் மேற்கொள்பவர்களிடம் ஆண்டு சந்தா வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிற கணக்குகளின் இடுகைகள் மற்றும் புக்மார்க்கிங் இடுகைகளுக்கும் இந்த ஆண்டு சந்தா வசூலிக்கப்படுகிறது. அதன்படி அடிப்படை அம்சங்களுக்கு ஒரு டாலர் (இந்திய மதிப்பில் ரூ.83) ஆண்டு சந்தாவாக வசூலிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோதனை முறையில் இது நியூசிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. ஏற்கனவே உள்ள பயனாளர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், சந்தா செலுத்துவதற்கு சப்ஸ்கிரைப் செய்ய விரும்பாத புதிய பயனாளர்கள், போஸ்ட்களை பார்க்கவும் படிக்கவும் மட்டுமே முடியும். அதேபோல் வீடியோக்களை பார்க்கவும் மற்றும் கணக்குகளை பின்தொடரவும் மட்டுமே முடியும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ட்விட்டர் லோகோவை நீல பறவையில் இருந்து எக்ஸ் ஆக மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.