Share via:
கூட்டணியில் இருந்து வெளியே வந்தபிறகும் மத்திய அரசு மீது எடப்பாடி
பழனிசாமி கடுமையாக விமர்சனம் வைப்பதே இல்லை என்பது மீண்டும் ஒரு முறை நிருபணம் ஆகியிருக்கிறது.
மிக்ஜாம் புயலுக்குக் கேட்ட நிவாரணத் தொகையை மோடி அரசு வழங்கவில்லை
என்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி அனைத்துக் கூட்டணிக் கட்சியினரும் கடுமையாக விமர்சனம்
செய்துவருகிறார்கள். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி, ‘அவங்க எப்பவும் அப்படித்தான்’
என்பது போன்று விமர்சனத்தை முடித்துக்கொண்டார்.
சேலம் மாவட்டம், இடைப்பாடியில் நீர்மோர் பந்தலை திறந்து வைத்து
பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘தமிழகத்தில் இதற்கு முன் பல புயல்கள் வந்துள்ளது. புள்ளி
விவரத்துடன் ஒன்றிய அரசிடம் நிவாரண நிதி கேட்டால், குறைத்து தான் கொடுப்பார்கள். எப்போதும்
ஒன்றிய அரசு, மாநிலம் கேட்ட நிதியை கொடுத்ததே கிடையாது. அதிமுக ஆட்சியிலும் பல்வேறு
புயல் பாதிப்புகள் வந்தது. அப்போது நாங்கள் கேட்ட நிவாரண நிதியை ஒன்றிய அரசு தரவில்லை.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதும், உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை.
மத்திய அரசு எப்போதும் மாநிலத்தை வஞ்சித்துக் கொண்டு தான் இருக்கிறது.
தற்காலிக நிவாரணம், நிரந்தர நிவாரணம் என்று இரண்டு வகைகள் உள்ளது. இவற்றை எப்படி வழங்கலாம்
என்று, ஒன்றிய அரசு ஒரு வரைமுறை வைத்துள்ளது. அதை மட்டும் தான் அவர்கள் கொடுப்பார்கள்.
தேர்தல் முடிவு வந்த பிறகே, தேசிய கட்சிகளுக்கு ஆதரவு, கட்சியில்
மாற்றம் போன்றவை குறித்து முடிவு செய்யப்படும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் தற்போது
அமலில் உள்ளது. அதனால் நீதிமன்றம் சார்ந்த கேள்விகளுக்கும், தேர்தல் ஆணையத்தின் பாரபட்சம்
குறித்த கேள்விகளுக்கும் பதில் சொல்ல முடியாது’’ என்று முடித்துக்கொண்டார்.