Share via:
கோவை தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராகப் போட்டியிடும் அண்ணாமலை காமாட்சிபுரத்தில் பிரச்சாரத்தை முடித்து விட்டு
திருச்சி சாலைக்கு வந்த போது இரவு 10 மணியை கடந்திருந்தது. அதன் பிறகும் எனக்காக காத்திருக்கும்
மக்களை சந்திக்கப் போகிறேன் என்று அடம் பிடித்து நடுரோட்டில் பிரச்னை செய்திருக்கிறார்
அண்ணாமலை.
இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ய கூடாது என்ற விதியை மீறி
அண்ணாமலை பிரச்சார வாகனத்தில் கையசைத்தவாறு பயணித்தார். தேர்தல் விதியை மீறியும் அனுமதி
பெறாமல் நூதன முறையிலும் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.
ஆனால் அண்ணாமலை வாகனத்தில் இருந்து இறங்க மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வாக்குவாதத்தை தொடர்ந்தது பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கிய
அண்ணாமலை கட்சியினருடன் நெடுஞ்சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரிடம்
போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி களைந்து செல்லுமாறு வலியுறுத்தினர்.
ஒரு கட்டத்தில் தொண்டர்களுடன் சாலையில் அண்ணாமலை நடக்க தொடங்கினார்.
அண்ணாமலையின் இந்த செயலால் கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 கிலோ மீட்டர்
தூரத்துக்கு போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இதையடுத்து அண்ணாமலை உள்பட 300 பேர்
மீது தேர்தல் பறக்கும் படையினர் கொடுத்த புகாரின் பேரில் கோவை சூலூர் போலீசார் 2 பிரிவுகளின்
கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அனுமதியின்றி கூடியது, பொதுமக்களுக்கு இடையூறு ஆகிய பிரிவுகளின்
கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்யக்கூடாது என்பது அண்ணாமலைக்குத்
தெரியாதா..? இந்த விவகாரத்தில் காவல் துறை மீது அண்ணாமலை பழி போடுவது ஏன் என்று அரசியல்
விமர்சகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
தேர்தல் நேரத்தில் காவல் துறையினரும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள்
போய் விடுவார்கள் என்பது கூட தெரியாமல் இதற்கும் தி.மு.க. மீது குற்றம் சுமத்துவது
தான் வேடிக்கை.