Share via:
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு
விஜய் கொடுத்த அரசுப் பணியை நீதிமன்றம் ரத்து செய்தது மட்டுமின்றி, தலையில் நறுக்கென
கொட்டு வைத்துள்ளது.
கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களுக்கு விஜய் வழங்கிய அரசுப் பணிக்கு
தடை விதிக்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் தீரன் திருமுருகன் மற்றும் வழக்கறிஞர் சீனி
அகமது ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், ‘கரூர் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் நேரடி
கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு
அரசுப் பணி வழங்குவது விசாரணை பாதிக்கும் என்பதோடு சாட்சிகள் கலையவும் வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் மக்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின்
குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படவில்லை. கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள்
குடும்பத்துக்கு அரசு வேலை வழங்குவது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். எனவே சிபிஐ
விசாரணை முடியும் வரை அரசு வேலை வழங்க தடை விதித்து உத்தரவிட வேண்டும்’’ என்று கேட்டிருந்தனர்.
இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு வந்தபோது அரசு தரப்பில்,
“கருணைப் பணி வழங்குவதற்கு சில வழிகாட்டுதல்கள் உள்ளன. அவ்வாறு தான் கரூர் சம்பவ
அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது…” என தெரிவித்தனர்
இதற்கடுத்து நீதிபதிகள், “அரசுப் பேருந்து விபத்துகளில் உயிரிழந்தவர்களின்
குடும்பத்திற்கு, அரசு வேலை வாய்ப்பு வழங்கினால் எப்படி என்ற கேள்வியும் எழுகிறது.
சிவகாசியில் அடிக்கடி வெடி விபத்து நிகழும் சூழலில், அவர்களுக்கு அரசுப் பணி கோரினால்
என்ன செய்வது?
வேலைவாய்ப்புக்கு பலரும் காத்திருக்கிறார்கள். அது குறித்து டின்பிஸ்சி
விவரங்களைத் தரும் என எண்ணினோம். ஆனால், அரசாணை கருணைப் பணி அடிப்படையில் பணி நிரந்தரம்
செய்ய அதன் ஒப்புதல் பெற விலக்களித்துள்ளது தெரியவந்தது.
திறன் வளர் பயிற்சிகளை வழங்கி பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்திற்கு
உதவலாமே? அது இவ்வாறு பணி வழங்குவதை விட பயனுள்ளதாக இருக்கும். அரசு தரப்பில் சாதாரண
பணி வழங்குவதாகக் கூறுவதை ஏற்க இயலாது. எப்பணியும் சாதாரண பணி அல்ல. எனவே கரூர் கூட்ட
நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசுப் பணி வழங்கிய அரசாணை ரத்து செய்யப்படுகிறது”
என்று கூறினர்.
விஜய் ஆதரவாளர்களுக்கு இந்த தீர்ப்பு கடும் ஏமாற்றம் தந்த்துள்ளது.
எனவே, மேல் முறையீடு கேட்டு உச்சநீதிமன்றம் செல்ல இருக்கிறார்கள்.
இதுகுறித்துப் பேசும் நாம் தமிழர் கட்சியினர், ‘’உச்சநீதிமன்றம்
கொடுத்த தீர்ப்பை அடிப்படையாக வைத்தே இந்த நியமனத்தை ரத்து செய்திருக்கிறார்கள். ஆனால்,
இவர்கள் வேண்டுமென்றே மீண்டும் உச்சநீதிமன்றம் செல்கிறார்கள்.
விஜய் நினைத்திருந்தால் கரூர் சம்பவத்தில் இறந்தவர்களுக்குத் தலா
ஒரு கோடி ரூபாய் தனது சொந்தப் பணத்திலே தந்திருக்க முடியும். நூறு கோடிகளில் சம்பளம்
வாங்கியவர், அதில் பாதியைக் கொடுத்திருந்தால் கூட இறந்தோர் குடும்பங்களுக்கு அது வாழ்நாள்
செட்டில்மென்ட் ஆக இருந்திருக்கும்.
இத்தனை பேர்களுக்கு ஒட்டுமொத்தமாக அரசுப் பணி வழங்குவது சட்ட சிக்கல்களைத்
தரும் என்று தெரிந்தே அடாவடியாகப் பணிநியமனம் தந்து, இப்போது அது பறிபோயும் விட்டது.
அவர்களுக்குக் குடும்பத்தினர் இறந்த துக்கத்தோடு, கையில் கிடைத்த அரசு வேலை பறிபோனதும்
இப்போது புதிய மன உளைச்சலாகச் சேர்ந்திருக்கும்…’’ என்கிறார்கள்.
என்ன செய்யப்போகிறார் விஜய்?
