Share via:
சென்னை கொளத்தூரில் உள்ள முதலமைச்சரின் அலுவலகத்தை முற்றுகையிட்ட இளைஞர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மின்வாரியத்தில் தற்காலிக பணியிடங்கள் நிரப்பும் பணி நடைபெற்று வருகின்ற நிலையில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் விண்ணப்பித்து இருந்தனர். தங்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைத்துவிடும் என்று காத்திருந்த போது, ஒரு சிலருக்கு மட்டும் பணி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த வேலை கிடைக்காதவர்கள் சென்னை கொளத்தூரில் உள்ள முதலமைச்சர் அலுவலகம் முன்பு ஒன்றாக திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, ‘‘மின்வாரிய அதிகாரிகள், தகுதியின் அடிப்படையில் விண்ணப்பித்தவர்களுக்கு வேலை வழங்கியுள்ளதாக கூறுகிறார்கள். அது எந்த மாதிரியான தகுதி என்பதை அவர்கள் விளக்கமாக தெரிவிக்க வேண்டும். எனவே இந்த விவகாரத்தை முதலமைச்சரின் பார்வைக்கு கொண்டு வேண்டும் என்பதே எங்களின் போராட்டத்தின் நோக்கம்’’ என்று இளைஞர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
முதலமைச்சரின் தொகுதியான கொளத்தூரில் இளைஞர்கள் திடீர் போராட்டத்தில் குதித்ததால் பாதுகாப்பு கருதி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடப்பதாகவும் விண்ணப்பித்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.