Share via:
ஒருவழியாக வர்த்தக மாநாடு நடந்துமுடிந்திருக்கிறது. இந்த மாநாட்டின்
நிறைவு நாளில் பேசிய ஸ்டாலின், ‘’இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது, இறுதி செய்யப்பட்ட
மொத்த முதலீடுகள் முன்னெப்போதும் இல்லாத அளவாக, 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய்
என்பதை, இந்தியாவே உற்றுநோக்கும் இந்த அவையில் பெரும் மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன்.
இந்த முதலீடுகள் மூலம் நேரடி மற்றும் மறைமுமாக மொத்தம் 26 லட்சத்து 90 ஆயிரத்து
657 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்” என்று தெரிவித்தார்.
அதோடு, தமிழ்நாட்டில் ஸ்டார்ட் அப்களின் வளர்ச்சிப் பாதையை ஊக்குவிப்பதற்கும்,
இந்தியாவிலும், உலக அளவிலும் உள்ள முதலீட்டு பங்குதாரர்களுக்கு இடையேயான இடைவெளியைக்
குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட TANFUND தளத்தை ஸ்டாலின் திறந்துவைத்தார்.
மாநாட்டு நிறைவு விழாவில், திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள
டாடா பவர் நிறுவனத்தின் Solar PV தொழிற்சாலை விரிவாக்கத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
மேற்கொள்ளப்பட்டது. அதோடு தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில் ரூ. 22,130 கோடி முதலீடுகளுக்கான
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
முதல்வர் கூறியிருக்கும் ஒட்டுமொத்த முதலீட்டில், அதானி குழுமம்
42 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோடியின் நண்பன்
அதானியை திருடன் என்று ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார். அவரது முதலீடுகள்
எல்லாமே குளறுபடிகள் நிறைந்தவை என்று குற்றம் சாட்டிவரும் நிலையில், தமிழகத்தில் அதானி
குழுமம் கால் ஊன்றுவது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் திரைமறைவு ஒப்பந்தம் நிலவுவதாக
சொல்லப்படுவதை, உண்மை என்று நினைக்கும் அளவுக்கு அதானி குழுமம் நுழைவது சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்த நிலையில், முதலீடுகளை ஈர்ப்பதற்காக இந்த மாதம் முதலே முதல்வர்
வெளிநாடு செல்ல இருப்பதாக அறிவிககப்பட்டுள்ளது. இது, முதலீடுகளை ஈர்ப்பதற்கான விசிட்
அல்ல, உடல்நிலையை பரிசோதனை செய்வதற்கான விசிட் என்றும் சமூகவலைதளங்களில் விமர்சனங்கள்
அனல் பறக்கிறது. இதற்கும் மத்திய அரசு அனுமதி கொடுத்திருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.
தி.மு.க. இந்த விவகாரத்தில் வாயை திறக்கவே இல்லை என்பதுதான் மெகா
திருப்பம்.