Share via:
திருவாரூரில் மர்ம காய்ச்சலுக்கு பயிற்சி மருத்துவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட பின்னரே நோயின் தன்மை அறியப்படுகிறது.
இந்நிலையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிந்து என்ற மாணவி 5 ஆண்டு மருத்துவ படிப்பை முடித்துவிட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பயிற்சி மேற்கொண்டு வந்தார். கடந்த சில நாட்களாக சிந்து காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தநிலையில் அவர் நேற்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சிந்துவின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பப்பட்டது. அதன் முடிவுகள் வெளி வருவதற்கு முன்னரே சிந்து இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். உயிரிழந்த பயிற்சி மருத்துவரான சிந்து கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸ் தொற்று இருக்குமா? அவர் சமீபத்தில் கேரளாவுக்கு சென்று வந்தாரா என்று பல்வேறு கோணங்களில் மருத்துவர்கள்குழு ஆலோசித்து வருகிறது.
திருவாரூரில் பயிற்சி மருத்துவர் சிந்து உயிரிழந்ததைத் தொடர்ந்து திருச்சியில் மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் பலியாகியுள்ளார். திருச்சி, திருவானைக்காவல், நரியன் தெருவைச் சேர்ந்த 38வயதான கனகவல்லி என்ற பெண் காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு கனகவல்லி மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். கனகவல்லிக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இல்லை என்று தெரியவந்துள்ளதால் மருத்துவர்கள் குழப்பமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

