Share via:
சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முக்கிய முடிவுகள் எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அனைத்து கழக செயலாளர்களும், மாவட்ட கழக செயலாளர்கள் திரளாக பங்கேற்றனர். அப்போது ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஏற்கனவே ஆதரவு அளிப்பதாக அறிவித்த எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
அதன்படி ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தின்படி தேர்தல் நடக்கும் பட்சத்தில் அதை செயல்படுத்த அ.தி.மு.க. தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.
இதற்கிடையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது குறித்து ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார். மதுரையில் தனது ஆதரவாளரின் இல்லத் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, அது அ.தி.மு.க. மாவட்ட பொதுச் செயலாளர்கள் கூட்டமே அல்ல, அது ஒரு கும்பல் என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஒவ்வொரு மாநிலத்திலும் மாறுபட்ட கருத்துகள் நிலவி வரும் நிலையில், அ.தி.மு.க. ஆதரவு அளிப்பதாகவும், தயாராக இருப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.