Share via:
புதுச்சேரியின் முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா தனது கணவர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக டி.ஜி.பி.யிடம் புகார் அளித்துள்ளார்.
புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்து ராஜினாமா செய்தவர் சந்திரபிரியங்கா. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த போதிலும் அவர் தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக பணியாற்றி வருவதோடு அரசு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் டி.ஜி.பி. ஸ்ரீனிவாசை சந்தித்த முன்னாள் அமைச்சர் சந்திரபிரியங்கா, தனது கணவர் சண்முகம் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். அதாவது தன்னுடைய கணவரான சண்முகத்திடம் இருந்து கடந்த 6 மாத பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், கணவர் தனக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து தன் மீது அவதூறு பரப்பும் விதமாக பேசி வரும் சண்முகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாய்மொழியாக புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து முன்னாள் அமைச்சர் சந்திரபிரியங்காவின் புகார் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு, காரைக்கால் சீனியர் எஸ்.பி.கவுகால் நிதின் ரமேசுக்கு டி.ஜி.பி. ஸ்ரீனிவாஸ் உத்தரவு பிறப்பித்தார். இப்படியிருக்க சந்திரபிரியங்காவின் கணவர் சண்முகம் தன் மீது பொய் புகார் கொடுத்துள்ளதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்திரபிரியங்கா விவாகரத்து கோரி காரைக்கால் குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார் என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.