Share via:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்கப்பட உள்ள சிறப்பு ரெயில்களில் பயணம் செய்ய பயணிகள் இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற 12ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாம்பரம்- நாகர்கோவில் இடையே 4 சிறப்பு ரெயில்களை இயக்கப் போவதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரெயில்வே விடுத்துள்ள அறிக்கையில், ‘‘தீபாவளி பண்டிகை காலத்தில் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக நாகர்கோவில்- தாம்பரம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி மாலை 4.35 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் நாகர்கோவில்&தாம்பரம் அதிவிரைவு பண்டிகை சிறப்பு ரெயில் வருகிற 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். இந்த ரெயில் அடுத்த நாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது.
மறுமார்க்கமாக அதே ரெயில் வருகிற 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் காலை 8.05 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு நாகர்கோவிலை அடையும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு 2ம் வகுப்பு குளிர்சாதன பெட்டி, 5-3ம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகள், 11 படுக்கை வசதி பெட்டி, 2 பொது பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகள் 2ம் வகுப்பு பெட்டிகளைக் கொண்ட இந்த ரெயிலின் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே பெருவாரியான இருக்கைகள் நிரம்பிவிட்டது குறிப்பிடத்தக்கது.