Share via:
தீபாவளிக்கு மறுநாளான (நவ.13) திங்கட்கிழமையை பொதுவிடுமுறையை அறிவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அரசு விடுமுறை தினம், ஞாயிற்றுக்கிழமைகளில் வந்தால் விடுமுறை போச்சே என்று அரசு ஊழியர்களும், தனியார் நிறுவன ஊழியர்களும் அதிலும் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் ரத்த கண்ணீர் வடிப்பார்கள்.
அந்த வகையில் இந்த ஆண்டு 2023ல் புத்தாண்டு, பொங்கல் பண்டிகை என பல பண்டிகைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் வந்துவிட்டது. தற்போது வருகிற 12ம் தேதி தீபாவளி பண்டிகையும் ஞாயிற்றுக்கிழமை வருவதுதான் இதற்கெல்லாம் உச்சகட்டம்.
சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் இருந்து சொந்த ஊர் செல்லும் பொது மக்கள் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகையை கொண்டாடி விட்டு பாதியிலேயே சென்னை திரும்ப வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. தீபாவளி பண்டிகை என்றாலே அன்றைய நாள் முழுவதும் கொண்டாடிவிட்டு சுற்றத்தாரோடு மகிழ்வதுதான். அப்படி இருக்கும் போது திங்கட்கிழமை பணிக்கு திரும்ப வேண்டி இருப்பதால் தீபாவளியை முழுமையாக கொண்டாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான நவம்பர் 13ம் தேதியை பொதுவிடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று பொது மக்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் இக்கோரிக்கையை முதலமைச்சர் நிச்சயம் ஏற்றுக் கொள்வார் என்றும் பொது மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.