Share via:
திருவண்ணாமலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 5ம் வகுப்பு மாணவி பிரியதர்ஷினி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த செம்மியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி புகழேந்தி, கீதா தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு பிரியதர்ஷினி என்ற 10 வயது மகளும் இருந்தார். பிரியதர்ஷினியின் தாய் பிரசவத்தின் போது இறந்ததால் புகழேந்தி சிறுமியை தனியாக வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் பிரியதர்ஷினி 5ம் வகுப்பு படித்துவந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரை தந்தை புகழேந்தி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். உள்ளூரில் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பிரியதர்ஷினி குணமாகாததால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பிரியதர்ஷினியை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர். டெங்கு காய்ச்சலுக்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த பிரியதர்ஷினி சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ள நிலையில் தமிழக அரசு பல்வேறு மருத்துவ முகாம்களை நடத்தியும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்த வேளையில் 10 வயது சிறுமியான பிரியதர்ஷினி உயிரிழந்த சம்பவம் பொது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.