Share via:
இயக்குனர் விக்ரமன் வீட்டிற்கு மருத்துவக்குழுவுடன் சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவரது மனைவிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
கடந்த 1990ம் ஆண்டு ‘புது வசந்தம்’ திரைப்படத்தை இயக்கி தமிழ் திரையுலகில் பிரபலமானவர்தான் இயக்குனர் விக்ரமன. அதைத்தொடர்ந்து பூவே உனக்காக, சூரியவம்சம், உன்னை நினைத்து, வானத்தை போல உள்ளிட்ட பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை இயக்கி தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை அமைத்திருந்தார். அதைத்தொடர்ந்து கடந்த 2014ம் ஆண்டு இவர் நினைத்தது யாரோ என்ற திரைப்படத்திற்கு பிறகு எந்த திரைப்படத்தையும் இயக்கவில்லை.
இந்நிலையில் தனியார் சேனல் ஒன்றில் பேட்டி அளித்த விக்ரமன் பேசும்போது, ‘‘தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் தனது மனைவி ஜெயப்பிரியா கடந்த 5 வருடங்களாக படுத்த படுக்கையாகிவிட்டதாகவும், அவருக்கு ஒவ்வொரு சொத்தாக விற்ற செலவு செய்து வருவதாகவும் வேதனையுடன் தெரிவித்தார். மனைவியை பார்த்துக் கொள்வதால் எந்த திரைப்படத்தையும் இயக்க முடியவில்லை என்றும் கவலையுடன் தெரிவித்தார்.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விக்ரமனின் வீட்டிற்கு மருத்துவக்குழுவுடன் நேரில் சென்று நலம் விசாரித்தார். இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் விக்ரமன் பேசும்போது, ‘‘என் மனைவிக்கு முதுகில் செய்த தவறான அறுவை சிகிச்சையால் அவரால் நடக்க முடியவில்லை.
என் நிலைமையை விளக்கி ஒரு சேனலுக்கு பேட்டியளித்த போது, அதை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், என்னுடைய பிரச்சினையை சுகாதாரத்துறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து 25க்கும் மேற்பட்ட மருத்துவர்களுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் என் மனைவியை நேரில் வந்து பார்த்து பரிசோதித்து நல்ல சிகிச்சை அளிப்பதாக கூறியுள்ளார்’’ என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.