Share via:
சென்னை பாலவாக்கம் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளி வளாகத்தில்
இன்று நடைபெற்ற சிறப்பு முகாமில், தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் குழந்தைகளுக்குப்
போலியோ சொட்டு மருந்தை ஊட்டி, இவ்வாண்டிற்கான தேசிய போலியோ சொட்டு மருந்து முகாமினை
முறைப்படி தொடங்கி வைத்தார்.
குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து வழங்கப்பட்டதோடு, அவர்களுக்குப்
பாராட்டுத் தலா ஒரு மென்மையான பொம்மைப் பரிசும் வழங்கி மகிழ்வித்தார். மாநிலம் முழுவதும்
இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும்
தன்னார்வலர்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால், பெற்றோர்கள் அனைவரும் தங்களின்
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு விடுபடாமல் சொட்டு மருந்து வழங்கித் தங்களின்
முழுப் பங்களிப்பை நல்க வேண்டும் எனச் சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில் பாலவாக்கம் அரசுப் பள்ளியில் போதிய இடவசதி செய்யப்படாததால்
குழந்தைகளுடன் வந்த பெற்றோர்கள் கடும் வெயிலில் தவிக்கும் நிலை ஏற்பட்டது சர்ச்சையாகியுள்ளது.
பள்ளி வளாகத்தின் உள்ளே வெறும் 35 பேர் மட்டுமே அமரும் வகையில்
நாற்காலிகள் போடப்பட்டு மிகக் குறுகிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால், தங்கள்
பிஞ்சுக் குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து செலுத்த அதிகாலை முதலே திரண்ட நூற்றுக்கணக்கான
பெற்றோர்கள் உள்ளே செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் காக்க வைக்கப்பட்டுள்ளனர்.
காலை 9:30 மணிக்கு நேரலையாகத் தொடங்கவிருக்கும் இந்நிகழ்விற்காகக்
காத்திருக்கும் மக்களை, சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க நிழல் இருக்கும்
பக்கமாக ஒதுங்கி இருக்குமாறு அங்கிருந்த அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக,
வேறு வழியின்றித் தங்களின் கைக் குழந்தைகளுடனும் சிறுவர்களுடனும் வந்த பெற்றோர் அங்கிருக்கும்
ஆம்புலன்ஸ் ஓரங்களிலும், பள்ளி மற்றும் அண்டை கட்டடங்களின் நிழல் விழும் சுவரோரங்களிலும்
ஒதுங்கி நின்று அவதிப்பட்டு வருவது அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிருப்தியையும்
ஏற்படுத்தியுள்ளது.
நல்லவேளையாக விஜய் சரியான நேரத்தில் வந்துவிட்டதால் இந்த விழா
எந்த சிக்கலும் இல்லாமல் முடிந்திருக்கிறது. தாமதப்படுத்தியிருந்தால் பெரும் சிக்கல்
நேர்ந்திருக்கும்.
நேரத்தை இதேபோன்று எப்போதும் கடைப்பிடியுங்கள் முதல்வரே.
