Share via:
பள்ளி மாணவர்களிடையே ஜாதி, மதம் போன்ற சமூக அழுக்குகள் நுழையக்கூடாது
என்பதற்காக இத்தனை காலமும் பாதுகாத்துவந்த நீதியை, ஒரே நாளில் உடைத்துப் போட்டிருக்கிறார்
அமைச்சர் செங்கோட்டையன்.
கோபிசெட்டிபாளையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழ்நாடு வருவாய்த்
துறை அமைச்சர் செங்கோட்டையன், ‘’பள்ளி மாணவர்கள் ஆண்டுதோறும் சாதிச் சான்றிதழ் வாங்குவதில்
உள்ள சிரமங்களைக் குறைக்க புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்வரின் உத்தரவின்படி,
முதற்கட்டமாக 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு புதிய அடையாள அட்டை வழங்கப்படும்.
இந்த அட்டையில் மாணவரின் முகவரி, ஜாதிச் சான்றிதழ் விவரங்கள்,
இரத்த வகை, ஆதார் எண், தொலைபேசி எண் ஆகியவை ஒருங்கிணைக்கப்படும். இதன் மூலம் மாணவர்கள்
சான்றிதழ்களுக்காக அலைவது தவிர்க்கப்படும்” என்று பேசினார்.
பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில் ஜாதி பெயர் என்கிற அமைச்சரின்
இந்தப் பேச்சு சர்ச்சையையும், எதிர்ப்புகளையும் கிளப்பியுள்ளது. இதுகுறித்து பேசும்
சமூக ஆர்வலர்கள், ‘’மாணவர்களிடம் பணக்காரர், ஏழை என்று உடைகளில்கூட வர்க்க வேறுபாட்டைக்
கண்டுவிடக்கூடாது என்பதற்காக தமிழ்நாட்டுப் பள்ளிகளில் சீருடையை அறிமுகம் செய்தார்
பெருந்தலைவர் காமராஜர். அந்த காமராஜரை கொள்கைத் தலைவர் என்று கூறிக்கொண்டே, அடையாள
அட்டையில் ஜாதியைச் சேர்ப்போம் எனக்கூறலாமா என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன்
மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் இன்னமும் வாய் திறக்கவே இல்லை.
அடையாள அட்டையில் ஜாதி குறிப்பிடப்படுவது மிகப்பெரும் கலவரத்துக்கும்
வன்முறைக்கும் வழிவகுக்கும். எனவே, இதை செயல்படுத்தினால் விளைவு மோசமாக இருக்கும் என்கிறார்கள்.
இதற்கும் தவெகவினர் ஏதேனும் முட்டுக்கொடுப்பார்களா..?
