Share via:
4400 நாள்களாகத் தொடர்ந்து இந்தியப் பிரதமராக இருந்து வருகிறார்
மோடி. இது முன்னாள் இந்தியப் பிரதமர் நேருவை மிஞ்சிய சாதனை என்று பாஜகவினர் கொண்டாடிவருகிறார்கள்.
இதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடங்கி, எடப்பாடி பழனிசாமி அரை வாழ்த்து தெரிவித்து
வருகிறார்கள்.
இந்த நிலையில், மோடி இதிலும் பொய்க்கணக்கு காட்டுவதாக குற்றம்
சாட்டுகிறார்கள் எதிர்க்கட்சியினர். அதாவது, ‘’1952-ம் ஆண்டு முதல் தொடர்ந்து
4,398 நாள்களாக இந்திய பிரதமராக இருந்தார் நேரு. 1947-1952 வரை நேருதான் பிரதமர் என்றாலும்,
அப்போது அவர் தேர்தலால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் அல்ல என்றாலும் அவரே பிரதமர்’’
என்கிறார்கள்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் ப.சிதம்பரம், ‘’4399 நாட்கள்
திரு நரேந்திர மோடி அவர்கள் பாரதப் பிரதமராகத் தொடர்ந்து இருப்பது பாராட்ட வேண்டிய
சாதனை ஆனால் அது ஜவாஹர்லால் நேருவின் சாதனையை முறியடித்தது என்று சொல்வது பிழை
1947 முதல் 1952 வரை நேரு அவர்கள் பிரதமராக இருந்தார் என்பதை மறக்க
முடியுமா? நீக்க முடியுமா? பா ஜ க வின் கணக்கு அவர்களுக்கு ஏற்பு என்பதைப் பற்றிக்
கருத்துச் சொல்லவேண்டியதில்லை; ஆனால் ஊடகங்கள் பா ஜ க வின் கூற்றை விளக்கமில்லாமல்
வெளியிடுவதுதான் வியப்பளிக்கிறது.
பிரதமர் மோடியின் 12-ஆண்டுச் சாதனையைப் பாராட்டுவோம். அதே நேரத்தில்
பாரத ரத்னா நேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம் 1947 முதல் 1952 வரை பிஞ்சுக்
குழந்தைப் பருவத்தில் இருந்த ஜனநாயகத்தைப் பாலூட்டி வளர்த்த பெருமை ஜவாஹர்லால் நேரு
அவர்களைச் சார்ந்தது என்பதை நினைவு கொள்வோம்’’ என்று கடுமை காட்டியிருக்கிறார்.
நேருவை வம்பிழுப்பதில் மோடிக்கு என்ன ஆனந்தமோ..?