Share via:
லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சிக்கு உறுதி அளித்திருக்கும் விஜய் ஆட்சியில்,
மின்வாரிய தலைமை அலுவலகத்திலிருந்து 18 ஹார்ட் டிஸ்க் திருட்டு போயிருப்பதாக வரும்
தகவல்கள் அதிரவைக்கின்றன.
நிலக்கரி கொள்முதல், ஒப்பந்தங்கள் தொடர்பான முறைகேடுகள் ஆய்வு
செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த திருட்டு நடந்திருக்கிறது. இந்தத்
திருட்டு மே 16-17 அன்று நடந்துள்ளது. அப்போது அலுவலகத்தில் சில ஊழியர்கள் மட்டுமே
இருந்தனர். இந்தத் திருட்டு மே 30 அன்றுதான் வெளியானது. பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த
ஊழியர்கள் தங்கள் கணினிகளில் திட்டக் கோப்புகள் (project files) மற்றும் அதிகாரப்பூர்வ
ஆவணங்கள் காணாமல் போனதை அறிந்தனர். நிதித் துறை உட்பட பல பிரிவுகள் மின்சாரத்துறை தலைவர்,
நிர்வாக இயக்குநர் அல்லது விழிப்புணர்வு அதிகாரிக்கு புகார் அளிக்க முன்வரவில்லை. ஹார்ட்
டிஸ்க் மற்றும் தரவுகளைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருந்த எவரும் போலீசில் புகார் அளிக்கத்
தயாராக இல்லை. டெண்டர், கொள்முதல் மற்றும் நிர்வாகப் பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள்
தங்கள் இழப்புகளைப் பதிவு செய்துள்ளனர். எட்டு உதவி பொறியாளர்கள், உதவி செயல் பொறியாளர்கள்
மற்றும் பிரிவு அதிகாரிகள் உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ், ‘’தமிழ்நாடு மின்சார வாரியத்தின்
தலைமை அலுவலகத்தில் கணினிகளில் மிக முக்கியமான தரவுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த
18 ஹார்டி டிஸ்க்குகள் திருடப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
திருடப்பட்ட ஹார்டு டிஸ்குகளில் நிலக்கரி கொள்முதல், ஒப்பந்தங்கள், ஏற்கனவே நடைபெற்ற
முறைகேடுகள் தொடர்பான தரவுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன என்பதால், மின்சார வாரியத்தில்
ஏற்கனவே நடைபெற்ற ஊழல்களுக்கான ஆதாரங்களை அழிப்பதற்காக நடந்த சதியாக இருக்கக்கூடும்
என்று ஐயங்கள் எழுந்துள்ளன.
மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 18 ஹார்டு டிஸ்குகள் திருடப்பட்டதாக
கூறப்படும் போதிலும், இதுவரை 8 ஹார்டு டிஸ்குகள் காணாமல் போனதாக மட்டுமே காவல்துறையில்
புகார் அளிக்கப்பட்டுள்ளது. உண்மையில் 18-க்கும் மேற்பட்ட ஹார்டு டிஸ்குகள் காணாமல்
போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மின்வாரிய தலைமை அலுவலகத்திற்குள் வெளியாள்கள்
நுழைய வாய்ப்பில்லை. எனவே, மின்வாரிய அதிகாரிகளின் துணையில்லாமல் இந்தத் திருட்டு நடந்திருக்க
முடியாது. தமிழ்நாட்டின் மிக முக்கியமான 10 அரசு அலுவலகங்களை பட்டியலிட்டால் அதில்
மின்சார வாரியத் தலைமை அலுவலகமும் கண்டிப்பாக இடம் பெறும். இவ்வளவு முக்கியத்துவம்
வாய்ந்த அலுவலகத்தில் கடந்த ஐந்தாண்டுகளாகவே கண்காணிப்பு காமிராக்கள் வேலை செய்யவில்லை
என்றும், தரகர்கள் நடமாட்டத்தை கண்காணிக்கக் கூடாது என்பதற்காக திட்டமிட்டே இவ்வாறு
செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தமிழ்நாட்டில் அதிக ஊழல் நடைபெறும் துறைகளில் மின் துறை மிகவும்
முக்கியமானது. அதனால் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்குகளை திருடியவர்கள்
யார்? அதற்கான காரணம் என்ன? ஊழல்களுக்கான ஆதாரங்களை அழிப்பதற்காகத் தான் இவ்வாறு செய்யப்பட்டதா?
ஐந்தாண்டுகளுக்கு மேலாக கண்காணிப்பு காமிராக்கள் செயல்படாதது ஏன்?’’ என்றெல்லாம் கேள்வி
எழுப்பியிருக்கிறார்.
இதுகுறித்து அமைச்சர் நிர்மல்குமார், ‘’மின்வாரிய தலைமை அலுவலகத்தில்
ஹார்ட் டிஸ்க் திருடப்பட்ட விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது பாதுகாக்கப்பட்ட
இடத்தில் ஹார்ட் டிஸ்க்கள் காணாமல் போய் உள்ளது ஆகவே ஒரு சில ஊழியர்கள் தான் இதை செய்திருக்க
முடியும் என்ற சந்தேகம் உள்ளது என்ன ஆவணம் திருடப்பட்டது அது யாருக்காக திருடப்பட்டது
என விசாரணைக்கு பிறகே தெரிய வரும்…’’ என்று தெரிவித்துள்ளார்.
என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

