Share via:
தமிழகத்தில் முதல்வர் விஜய் எந்த இடத்துக்குப் போனாலும், எக்கச்சக்க
ரசிகர்களும் ரசிகைகளும் பின் தொடர்வதும் காத்திருப்பதும் இன்று வரையிலும் தொடர்கிறது.
அதே போன்று லண்டனில் ரசிகர்கள் ஹோட்டலுக்கு முன்பே காத்திருப்பது, பிரிட்டன் காணாத
அதிசயம் என்கிறார்கள்.
பிரிட்டிஷ் நாடான யு.கே.விற்கு உலகின் பல்வேறு பகுதியில் இருந்து
நடிகர்கள், இசைக் கலைஞர்கள், அரசியல்வாதிகள் தினமும் வருகிறார்கள். ஆனாலும், இதுவரை
யாருக்காகவும் நடுரோட்டில் மக்கள் கூடியதில்லை என்பது மிகப்பெரும் ஆச்சர்யமான செய்தியாக
பார்க்கப்படுகிறது.
லண்டன் நகரின் முக்கியமான மருத்துமனை, லண்டன் பிரிட்ஜ் தொடர் வண்டி
நிலையம் இரண்டுக்கும் அருகில் விஜய் தங்கியிருக்கும் விடுதி அமைந்திருக்கிறது. இப்போது
அங்கே தினமும் காலை முதல் இரவு வரை ரசிகர்கள் வெளியே காத்திருக்கிறார்கள். அவ்வப்போது,
‘டிவிகே’, ‘விஜய்’ என்று கூச்சல் போட்டு வருகிறார்கள். இதை தொலைக்காட்சியில் காட்டியதும்,
வெவ்வேறு பகுதியில் இருந்து ரசிகர்கள் அங்கே வரத்தொடங்கிவிட்டனர்.
இதையடுத்து ரசிகர்கள் கூட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
தவெக சார்பில், ‘’மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.சி.ஜோசப் விஜய் அவர்களைக் காண்பதற்கு, லண்டன் மாநகர தமிழ் உறவுகள் உள்ளம் நிறைந்த அன்போடும் உணர்வோடும் ஆர்வமாக இருப்பீர்கள்.
ஆனால், பொதுமக்களின் பாதுகாப்பை மனதில் கொண்டும், லண்டன் மாநகரக் காவல்துறையின் வேண்டுகோளைக் கருத்தில் கொண்டும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள் உங்களைப் பார்க்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே அவரைக் காண்பதற்கு யாரும் முயற்சிக்க வேண்டாம் என்று அன்பு வேண்டுகோள் வைக்கிறோம்.
மேலும் வெற்றித் தலைவர் அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் வாசலில் காத்திருப்பது, அவர் செல்லும் வழியில் காத்திருப்பது போன்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்…’’ என்று அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
’’தயவு செஞ்சு கலைஞ்சு போங்க’’ என்று லண்டனில் முதலமைச்சர் விஜயைக்
காண திரண்ட கூட்டத்தில் முதலமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி தர்மராஜன் ஒலிப் பெருக்கி
வாயிலாக வைத்த வேண்டுகோளுக்கும் பயன் இல்லை. ரசிகர்கள் படையெடுப்பு நிற்கவில்லை என்பதுதான்
விஜய்யின் பவர்.

