Share via:
மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு
அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பள்ளிக்
கல்வித் துறை, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய
துறைகளின் முதன்மைச் செயலாளர்கள் மற்றும் இயக்குநர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 27 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை
செயலாளர் சாய் குமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு சிறு தொழில்கள் கழகத்தின் தலைவராகவும் மேலாண்மை இயக்குநராகவும்
இருந்த தர்மேந்திர பிரதாப் யாதவ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளராகவும்,
எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையராக இருந்த லில்லி கைத்தறி, கைவினைப் பொருட்கள்,
ஜவுளி மற்றும் கதர்த்துறைச் செயலாளராகவும், தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின்
(கோ-ஆப்டெக்ஸ்) மேலாண்மை இயக்குநராக இன்னசென்ட் திவ்யா பள்ளிக் கல்வித்துறைச் செயலாளராகவும்,
பள்ளிக் கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த சந்தரமோகன் வருவாய் நிர்வாகம்
மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர், ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மினரல்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்த சரவணவேல்ராஜ்
எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையராகவும், பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத்
துறை ஆணையராக, தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையத்தின் (ஆவின்) மேலாண்மை
இயக்குநராகவும் அஜய் யாதவ் கூடுதல் பொறுப்பு வகிப்பார். குடிமைப் பொருட்கள் வழங்கல்
மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையராக சிவராசு, சேலம் கூடுதல் ஆட்சியராக (வளர்ச்சி)
இருந்த சிவானந்தம் நிதித்துறை துணைச் செயலாளராகவும், தமிழ்நாடு சிறு தொழில்கள் கழகத்தின்
கூடுதல் தலைமைச் செயலாளர், தலைவர், மேலாண்மை இயக்குநராக முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்
கழகத்தின் முதன்மைச் செயலாளர், மேலாண்மை இயக்குநராக வெங்கடேஷ், தமிழ்நாடு மினரல்ஸ்
நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக கந்தசாமி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின்
மேலாண்மை இயக்குநராக கவிதா ராமு, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்
கழகத்தின் (தாட்கோ) மேலாண்மை இயக்குநராக செந்தில் ராஜ், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர்
பொறுப்பையும் தொடர்ந்து கூடுதல் பொறுப்பாகக் கவனிப்பார்.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநராக இருந்த மோகன்
உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் செயலாளராகவும், பெருநகர சென்னை
மாநகராட்சியின் சுகாதாரத்துறை இணை ஆணையராக இருந்த ஷ்ரேயா பி.சிங் பள்ளிக்கல்வித்துறை
கூடுதல் செயலாளராகவும், நிதித்துறை இணைச் செயலாளராக இருந்த ராஜா கோபால் சுங்கரா தமிழ்நாடு
சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த சரண்யா அரி விருதுநகர் மாவட்ட
ஆட்சியராகவும், பொன்னேரி சார் ஆட்சியராக இருந்த அப்துல் ரஸீக் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராகவும்,
செங்கல்பட்டு சார் ஆட்சியராக இருந்த நல்லசிவன் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராகவும்,
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ரவிக்குமார் வேளாண்மை-உழவர் நலத்துறை இணைச்
செயலாளராகவும், உதகமண்டலத்தில் சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் திட்ட இயக்குநராக
இருந்த சங்கீதா கோவை வணிகவரித்துறை இணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுலாத்துறை இயக்குநர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக
மேலாண்மை இயக்குநருமான ஜெயசீலன், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராகவும்,
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் இருந்த சுகபுத்ரா, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று
வாரியத்தின் செயல் இயக்குநராகவும், கோவை வணிகவரித்துறை இணை ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவராவ்,
பெருநகர சென்னை மாநகராட்சியின் துணை ஆணையராக (சுகாதாரம்) நியமிக்கப்பட்டுள்ளனர். திருச்சி
மாநகராட்சி ஆணையராக இருந்த வீர பிரதாப் சிங் சிப்காட் நிறுவனத்தின் செயல் இயக்குநராகவும்,
திருச்சி மண்டல இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக இருந்த பொன்மணி, திருச்சி
மாநகராட்சி ஆணையராகவும், சிப்காட் செயல் இயக்குநராக இருந்த கேத்தரின் சரண்யா, வேலூர்
மாநகராட்சி ஆணையர் என 27 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
பள்ளிக்கல்வித் துறைச் செயலாளராக இன்னசென்ட் திவ்யா ஐஏஎஸ் நியமனம்
செய்யப்பட்டதில் கோ ஆப் டெக்ஸ் ஊழியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். திவ்யா பதவியேற்ற
பிறகு விற்பனை நிலையத்தில் சேலை மட்டுமே விற்க வேண்டும். போர்வை மற்றும் வீட்டுத் துணியை
உள்ளிட்ட இதர துணிகளை கொள்முதல் செய்யக்கூடாது என்று கடும் கெடுபடி விதித்தார். மேலும்
பெண் ஊழியர்கள் வெளியில் சென்று துணிகளை விற்க வேண்டும் என்ற கெடுபிடிகள் காட்டப்பட்டது.
மேலும் 10 விற்பனை நிலையங்கள் மூடப்படும் என்ற அறிவிக்கப்பட்டதால் ஊழியர்கள் அதிருப்தி
அடைந்தனர். இந்த சூழலில் கோ ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குனர் மாற்றம் செய்யப்பட்டு இருப்பது
துறை ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

