Share via:
மெட்ராஸ் மாவட்டத்துக்கு காவல் துறை தோற்றுவிக்கப்பட்ட நாளுக்கு
முதல்வர் விஜய் வாழ்த்துச் செய்தி வெளியிட்டிருப்பது, போலீஸ் வட்டாரத்தில் மகிழ்ச்சி
ஏற்படுத்தியிருக்கிறது.
இன்று விஜய் விடுத்திருக்கும் அறிக்கையில், ‘’1859-ஆம் ஆண்டு மெட்ராஸ்
மாவட்டக் காவல் சட்டத்தை நிறைவேற்றி, நவீன மற்றும் அமைப்புரீதியான காவல்துறை தோற்றுவிக்கப்பட்ட
நாளை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படும் காவலர் நாளை முன்னிட்டு, சமூகத்தில் அமைதி
நிலவிடவும், சட்டத்தின் ஆட்சி நிலைபெறவும் தன்னலமின்றிப் பணியாற்றிவரும் காவல்துறையினர்
அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த காவலர் நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது மாநிலத்தில், குற்றங்களைத் தடுத்து, சட்ட ஒழுங்கைப் பேணுவதுடன்,
ஆபத்தான சூழல்களிலும், பேரிடர் காலங்களிலும் மக்களின் உயிர், உடைமை மற்றும் உரிமைகளைப்
பாதுகாப்பதிலும் துணிவுடன் நின்று களப்பணி ஆற்றிவரும் காவல்துறையினரின் வீரமும் தியாகமும்
என்றும் போற்றத்தக்கவை.
காவல்துறையினரின் பணிச்சுமையைக் குறைத்து, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன்
அவர்களின் பணித்திறனை மேம்படுத்தி, காவலர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும்
தேவையான நலத்திட்டங்களை உறுதிசெய்வதற்கும் நமது அரசு முன்னுரிமை அளிக்கும். மக்களும்
காவல்துறையுடன் கரம் கோர்த்து, நம்பிக்கையுடனும் நல்லிணக்கத்துடனும் பயணித்து, அமைதியும்
பாதுகாப்பும் நிறைந்த உன்னதத் தமிழ்நாட்டை உருவாக்க இந்நாளில் உறுதியேற்போம்’’ என்று
கூறியிருக்கிறார்.
இதற்கு காவல் துறையினர், ‘’காவலர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு
காவல்துறையினருக்கு வாழ்த்துச் செய்தி வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு
தமிழ்நாடு காவல்துறை சார்பாக மனமார்ந்த நன்றி…’’ தெரிவித்துள்ளனர்.

