Share via:
விஜய் வாக்குகளைப் பிரிப்பதால் திமுகவுக்கு தேர்தலில் மிகப்பெரும்
சிக்கல் என்று கருத்துக்கணிப்புகள் கூறிவந்த நிலையில், மத்திய அரசு கொண்டுவந்திருக்கும்
தொகுதி மறுவரையரை திமுகவுக்கு பெரும் உற்சாகம் கொடுத்துள்ளது.
இன்று தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல்லில்
முதல்வர் மு.க.ஸ்டாலின் கருப்புக் கொடி ஏற்றினார். அதோடு தொகுதி மறுவரையறை மசோதாவின்
நகலை எரித்தார். தமிழ்நாடு முழுவதும் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து
திமுகவினர் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்திவருகிறார்கள்.
இதுகுறித்து ஸ்டாலின், ‘’எங்கள் மண், எங்கள் உரிமை, மக்கள் தொகையைச்
சரியாகக் கட்டுப்படுத்தியதற்காகத் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பது அநீதி.
இந்தச் சதியை முறியடிக்கத் தமிழ்நாடே ஒன்றிணைந்து திரளும்
பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்! அன்று, தமிழ்நாட்டில் பற்றத்
தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பின்பே எங்கள்
தீ தணிந்தது! இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை
எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன். இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும்.
பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும். தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் – இன்பத் தமிழ்
எங்கள் வளமிக்க உளமுற்ற தீ’ என்று கொதிப்பு காட்டியுள்ளார்.
இந்த தொகுதி மறுவரையறை குறித்துப் பேசும் அரசியல் பார்வையாளர்கள்,
‘’தொகுதி மறுவரையறையையே முற்றிலுமாக எதிர்ப்பதும், அது அரசமைப்புக்கு எதிரானது என்றும்
முழங்குவதும் சரியான அணுகுமுறை அல்ல. மாறும்
மக்கள்தொகைக்கு ஏற்ப நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் எண்ணிக்கையை உயர்த்துவதே நற்போக்கு.
அதையே இந்திய அரசமைப்பும் சொல்கிறது.
1950இல் இந்திய மக்கள்தொகை சுமார் 36 கோடி; அன்றைக்கு மக்களவை
இடங்கள் 489. 1960இல் மக்கள்தொகை சுமார் 44 கோடியானதை அடுத்து, மக்களவை இடங்கள்
520 ஆக்கப்பட்டது. 1970இல் மக்கள்தொகை சுமார் 54.8 கோடியானதை அடுத்து, மக்களவை இடங்கள்
543 ஆக்கப்பட்டது. 1970களில் மக்கள்தொகை கட்டுப்பாட்டு கொள்கையை இந்திய அரசு எடுத்தது.
அதைத் தொடர்ந்தே 50 ஆண்டுகளாக இந்த அதிகரிப்பு நிறுத்தப்பட்டிருந்தது.
ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் இந்திய மக்கள்தொகை கடும் உயர்வை சந்திக்கிறது.
2000-2010 இடையிலான அதிகரிப்பு மட்டும் 18.5 கோடி. கிட்டத்தட்ட அன்று பாகிஸ்தான் மக்கள்தொகைக்கு
சமம் இது (19 கோடி). அதாவது, பத்தாண்டுகளில் இந்தியாவுக்குள் ஒரு பாகிஸ்தான் உருவாகியிருக்கிறது.
இவ்வளவு மக்களுக்கும் புதிய பிரதிநிதித்துவம் கொடுக்காமல் இருக்க முடியாது. அது ஜனநாயக
விரோதம். நமக்கு அடுத்து பெரும் மக்கள்தொகையைக் கொண்ட சீனத்தின் நாடாளுமன்றம் 2878
உறுப்பினர்களைக் கொண்டுள்ளதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
எனில், நாம் இந்தப் பிரச்சினையை எப்படி அணுகுவது? மறுவரையறையை
ஆதரிக்கிறோம்; ஆனால், 1970இல் என்ன விகிதாசாரத்தில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம்
இருந்ததோ அந்த அடிப்படையில் இதைச் செய்ய வேண்டும்; அதாவது, தமிழகத்தின் பிரதிநிதித்துவம்
இன்றுள்ள அளவுக்கு (சுமார் 7%) குறையக் கூடாது என்பதற்காகப் போராட வேண்டும்’’ என்கிறார்கள்.
திமுக தேர்தலுக்காக போராடுகிறதா, உணர்வுரீதியாகப் போராடுகிறதா..?

