Share via:
எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் வேறு யாரும்
வெற்றி பெறுவது சாத்தியமில்லை என்பது உணர்ந்ததால், அங்கு காசி என்ற புதுமுகத்தை திமுக
இறக்கியிருக்கிறது. இந்த நிலையில் விஜய் ரசிகர்களோ, ‘’எங்கள் வேட்பாளரை விலைக்கு வாங்கியதால்
அவரை தோற்கடிப்போம்’’ என்று வில்லங்கமாகப் பேசி வருகிறார்கள்.
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட
அருண்குமார், வேட்புமனு தாக்கலின்போது வேண்டும் என்றே தவறான தகவலை தெரிவித்தார். இதனால்
அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. வேட்புமனு பரிசீலனையின்போது, கழிவறை சென்றுவிட்டு
வருவதாக கூறிச் சென்றவர் தலைமறைவாகி விட்டார்.
இதையடுத்து, தவெக தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். வேட்பாளரை கடத்தி
சென்றுவிட்டதாக போலீசிலும் புகார் செய்தனர். ஆனால் இன்று வரை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட
அருண்குமார் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை.
அருண்குமார் அயோத்தியாப்பட்டணம் பக்கமுள்ள வீராணத்தை சேர்ந்தவர்,
முன்பு அதிமுகவில் இளைஞர் இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளர் பதவி வகித்தவர். அவரை திட்டமிட்டு தவெகவில் இணைய வைத்து, சீட்டை வாங்கியுள்ளனர்.
சீட் கிடைத்ததும் தவெக சார்பில் யாரும் போட்டியிடாத வகையில் எடப்பாடி
பழனிசாமி அவரை விலை கொடுத்து வாங்கி விட்டதாக தவெகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
எனவே, உள்ளடி வேலை செய்த எடப்பாடி பழனிசாமியை தோற்கடித்தே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக
உள்ளனர். எனவே, இந்த தொகுதியில் மட்டும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் திமுகவுக்கு
ஆதரவாகவும் விஜய் ரசிகர்கள் வாக்களிக்க இருக்கிறார்களாம்.
தகுதியான வேட்பாளரை தேர்வு செய்யாத விஜய் மீது பாய்வதை விட்டு,
எடப்பாடி மீது பாய்வதால் யாருக்கு என்ன லாபம் என்று அதிமுகவினர் சிரிக்கிறார்கள்.

