Share via:
கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின்
நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும்’ என்ற தீர்மானம் சட்டப்பேரவையில்
நேற்று நிறைவேறிய நிலையில், இன்று நீட் தீர்மானம் நிறைவேறுகிறது.
நீட் ரகசியம் தெரியும் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த திமுக, நீட்டை
ஒழிப்பதற்கு எந்தவொரு முயற்சியும் செய்யவே இல்லை. ஆனால், ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்கும்
நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக விஜய் தனித் தீர்மானம் கொண்டுவருவது அரசியல் திருப்பமாகப்
பார்க்கப்படுகிறது.
இன்று நீட் நுழைவுத் தேர்வு மற்றும் மத்திய அரசின் வெளிநாட்டுப்
பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம் (FCRA) ஆகியவற்றுக்கு எதிரான இரு காரசாரமான
தீர்மானங்கள் சட்டப்பேரவையில் கொண்டுவரப்படவுள்ளன.
தமிழ்நாட்டில் மருத்துவச் சேர்க்கைக்கு நடத்தப்படும் நீட் நுழைவுத்
தேர்வு, கிராமப்புற மற்றும் எளிய பின்னணி கொண்ட மாணவர்களின் மருத்துவக் கனவுக்குப்
பெரும் தடையாக இருக்கிறது. அனிதாவின் மரணத்திற்குப் பிறகு நீட்டை எதிர்த்து பல போராட்டம்
நடத்தியும் மத்திய பாஜக அரசு, இதற்கான சட்டத்திருத்தம் நிறைவேற்றவே இல்லை.
இந்த நிலையில் நீட் தேர்வுக்கு முற்றுப் புள்ளியாக விலக்கு அளிக்க
வேண்டும் என்பதை வலியுறுத்தும் முக்கியத் தீர்மானத்தைச் சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ்
இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்கிறார். அதேபோல் மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும்
கிராமப்புற மாணவர்களின் நலனைப் பாதுகாக்கவும், மாநிலத்தின் கல்வி மற்றும் சுகாதாரத்
துறை உரிமைகளை நிலைநிறுத்தவும் இந்தத் தீர்மானம் கொண்டுவரப்படுகிறது.
மேலும், மத்திய அரசால் அமல்படுத்தப்பட்ட வெளிநாட்டுப் பங்களிப்பு
(ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம் பல்வேறு தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும்
சமூக நல அமைப்புகளின் வெளிநாட்டு நிதியுதவிகளைப் பெறுவதிலும் அவற்றைப் பயன்படுத்துவதிலும்
கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
எனவே சமூக சேவை நிறுவனங்கள் மற்றும் தொண்டு அமைப்புகளின் சுதந்திரமான செயல்பாட்டைப்
பாதிக்கும் இந்த சட்டத் திருத்தங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்
என வலியுறுத்தி, அமைச்சர் ராஜ்மோகன் இன்று சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருகிறார்.
இந்த தீர்மானம் மூலம் சமுதாயத்தின் அடித்தட்டு மக்களுக்குச் சேவை செய்யும் தொண்டு நிறுவனங்களின்
நிதி ஆதாரங்கள் தடைபடாமல் இருப்பதை உறுதி செய்ய மாநில அரசு முனைகிறது.
நீட் தேர்வு விலக்கு, வெளிநாட்டு நிதி சட்டத் திருத்த எதிர்ப்பு
மற்றும் பட்ஜெட் விவாதங்கள் இன்று ஒரே நாளில் விவாதத்திற்கு வரவிருப்பதால், இன்றுய
சட்டமன்றக் கூட்டம் பெரும் அரசியல் எதிர்ப்பார்ப்பையும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கடந்த ஆட்சியில் நீட் தேர்வு ரத்து செய்வதற்கு சிறு துரும்பும்
அசைக்காத திமுக இன்று தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.